ஈழப் பிரச்சினையில் இந்தியாதலையிடக் கூடாதாம்; கூறுகிறது பாக்.
கொழும்பு:இலங்கை இனப் பிரச்சினையில் இந்தியா உள்ளிட்ட எந்த வெளிநாடும் தலையிடக் கூடாது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
இலங்கைக்கான பாகிஸ்தான் துணைத் தூதர் ஷாசாத் செளத்ரி கொழும்பில் செய்தியாளர்களிடம் நேற்று பேசினார். அப்போது இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக அவர் கருத்துக்கள் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், இலங்கை இனப் பிரச்சினை, இலங்கையின் உள்நாட்டு விவகாரம். இதில் இந்தியா உள்ளிட்ட வேறு எந்த வெளிநாடும் தலையிடக் கூடாது.
இலங்கைப் பிரச்சினையை அவர்களே சமாளித்துக் கொள்வார்கள். அதில் இந்தியாவோ, பாகிஸ்தானோ, நார்வேயோ அல்லது வேறு எந்த நாடுமோ தலையிடுவதற்கு உரிமை இல்லை.
இலங்கைப் பிரச்சினைக்கு இலங்கையில் உள்ளவர்களால்தான் தீர்வு காண முடியும். வேறு நாடுகளுக்கு இதில் உரிமை இல்லை.
சர்வதேச அரங்கில் இலங்கைக்கு உரிய அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. தற்போது இலங்கையில் நிலவும் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்து, உலக அரங்கில் தனக்குரிய இடத்தைப் பெற இலங்கை அரசு போராட வேண்டும் என்றார் சௌத்ரி.
விடுதலைப் புலிகளை சமாளிக்க முடியாமல் திணறும் இலங்கை அரசு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக தீவிரமாக போராட இந்தியா ஆயுத உதவி செய்ய வேண்டும் என்று கோரியது. ஆனால் இந்தக் கோரிக்கையை இந்தியா நிராகரித்து விட்டது.
இதையடுத்து பாகிஸ்தான் மற்றும் சீனாவிடமிருந்து ஆயுத உதவியைப் பெறத் தொடங்கியுள்ளது இலங்கை. இதுகுறித்து சமீபத்தில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தான், சீனாவிடமிருந்து இலங்கை அரசு ஆயுத உதவிகளைப் பெறக் கூடாது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் பாகிஸ்தான் துணைத் தூதர் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுக்கு அதிபர் ராஜபக் ஷே அளித்த பேட்டியில், இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக கூறியிருந்தார்.
இதற்கிடையே, இலங்கைக்கு நன்கொடை வழங்கும் நாடுகளின் கூட்டம் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் இன்று நடைபெறுகிறது. இலங்கை நிலையை ஆய்வு செய்வதோடு, போர் நிறுத்தத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications