டிரைவர்கள் ஸ்டிரைக்: ரயில் போக்குவரத்துஸ்தம்பிப்பு-பயணிகள் போராட்டம்!
சென்னை: சென்னையில் ரயில் டிரைவர்கள் திடீரென போராட்டத்தில் குதித்ததால் ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் தண்டவாளங்களில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டியிலிருந்து, சென்னை கடற்கரைக்கு சென்ற மின்சார ரயிலை ஓட்டி சென்ற டிரைவர் நேசன் என்பவர், சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தும், ரயிலை உரிய இடத்திற்குள் நிறுத்தாமல் பிளாட்பாரத்தைத் தாண்டி நிறுத்தியுள்ளார்.
இதையடுத்து ரயில் நிலைய மேலாளர், நேசன் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதையடுத்து ரயில் டிரைவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
நேசன் மீது தவறு இல்லை. அவர் மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி இன்று காலை ரயில் டிரைவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களின் போராட்டத்தை அறிந்த டிரைவர்கள் ரயில்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு சென்டிரல் ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
காலை நேரம் என்பதால் வேலைக்கு செல்வோரும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வோரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
ரயில் டிரைவர்களின் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட ஏராளமான பயணிகள், ரயில் நிலைய அலுவலகங்களை முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். ரயில் டிரைவர்களுடன் ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நேசனுக்கு இலாகாபூர்வ விசாரணை முடிந்த பிறகே பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க டிரைவர்கள் மறுத்தனர்.
காலை 11 மணி வரை போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், கோஷமிட ஆரம்பித்தனர். ஏராளமான பெண்கள், சென்டிரல் ரயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் ரயில் புறப்பட முடியவில்லை.
இந்த நிலையில், அதிகாரிகளுக்கும் டிரைவர்களுக்கும் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. நேசன் இலாகாபூர்வ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நிர்வாகம் சார்பில் கண்டிப்புடன் கூறப்பட்டது.
பயணிகள் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் இதை டிரைவர்கள் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து வேலை நிறுத்தம் திரும்ப பெறப்பட்டு டிரைவர்கள் பணிக்குத் திரும்பினர். பின்னர் ரயில்கள் வழக்கம் போல ஓட ஆரம்பித்தன. பிற்பகல் 12 மணியளவில்தான் நிலைமை சகஜமடைந்தது.












Click it and Unblock the Notifications