இந்தோனேஷியா-எரிமலை வாயுவால் 6 மாணவர்கள் பலி
ஜகார்தா:ஜகார்தா அருகே உள்ள எரிமலையிலிருந்து வெளியான விஷ வாயுவால் 6 பள்ளிக் குழந்தைகள் பலியாயினர்.
உலகிலேயே அதிக எரிமலைகளை கொண்ட நாடு இந்தோனேஷியா. ரிங் ஆப் பயர் என்று அழைக்கப்படும் உலகில் எரிமலைகள் நிறைந்த நாடுகளின் வட்டத்தில் அமைந்துள்ளது இந்தோனேஷியா. எரிமலை வெடிப்புகளும், நிலநடுக்கங்களும் நிறைந்த நாடு இது.
ஜகார்தாவிற்கு அருகே உள்ள காட்டுப் பகுதியில் அமைந்துள்ள சலக் மலையில் ஒரு எரிமலை உள்ளது.
இந்த எரிமலைக்கு கேம்ப் செல்வதும், எரிமலையின் முகப்பு வரை செல்வதும் இப் பகுதி மக்களுக்கு பொழுதுபோக்காக உள்ளது.
இந்நிலையில் 20 பள்ளிக் கூடங்களிலிருந்து மாணவர்கள் மலையேற்றத்திற்காக இந்தப் பகுதிக்கு வந்திருந்தனர். இதிலிருந்து 6 மாணவர்கள் எரிமலையின் புகை பரவியிருந்த உச்சிக்குச் சென்றனர்.
அவர்கள் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் உடனிருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, ஒரு மாணவனின் வாயிலிருந்து புகை வந்தவண்ணம் இருந்தது. அவனுடன் சென்றவர்களும் மயங்கிய நிலையில் இருந்தனர்.
எரிமலையில் இருந்து வெளியான சல்பர் வாயுவை இவர்கள் சுவாசித்துள்ளனர். இதில் ஒருவர் பலியாகிவிட மயங்கிக் கிடந்து மற்ற 5 மாணவர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மலைப் பாதையில் அவர்களை கீழே இறக்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல நெடு நேரம் பிடித்தது. இதனால் சிகிச்சை பலனின்றி அவர்களும் பலியாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications