தேமுகவில் இணைந்த 1,000 பாஜகவினர்!
சென்னை:திருமண மண்டபத்தை இடித்தாலும், வேறு எதை இடித்தாலும், என்னை மட்டும் இடிக்கவே முடியாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
பாஜக மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் திருவேங்கடம் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சியினர் விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசுகையில், நேரமின்மை காரணமாக சமீப காலமாக பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தேமுதிகவில் இணையும் நிகழ்ச்சிகளை நடத்த முடியவில்லை.
மேலும் கல்யாண மண்டபம் இடிப்பு காரணமாகவும் இது தாமதமாகி வந்தது. இனிமேல் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பிற கட்சி தொண்டர்கள் தேமுதிகவில் இணைவார்கள்.
என் கல்யாண மண்டபத்தை இடித்தாலும் அல்லது வேறு எதை இடித்தாலும் என்னை மட்டும் இடிக்க முடியாது. நான் சற்று அவகாசம் கேட்டேன். கொடுக்கவில்லை, இடித்து விட்டார்கள். இப்போது பாலத்தை கட்டி முடித்து விட்டார்களா?.
மிரட்டிப் பணிய வைக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால் எனது உடம்போடு ஊறிப் போன தைரியத்தை விலை கொடுத்து வாங்க அவர்களால் முடியாது.
கட்சி ஆரம்பித்த ஒன்னே முக்கால் வருடத்திலேயே மதுரை மேற்குத் தொகுதியில் சிறப்பான வாக்குகளைப் பெற்றுள்ளோம். வேறு எந்தக் கட்சியிடமும் இந்த சாதனை இல்லை.
இன்று தமிழகத்தில் தீவிரவாதம் தலை விரித்தாடுகிறது. சிவகங்கையில் கார் குண்டு வைத்து கொல்கிறார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம், தைரியம்தான்.
ரூ. 10 ஆயிரம் கோடி மோசடியைக் கண்டுபிடித்து விட்டேன் என்கிறார் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராசா. அவருக்கு முன்பு இருந்தவர் யார், அவரும் திமுகதானே, இதையெல்லாம் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பணம் கொடுத்து ஓட்டுக்களை வாங்குகிறார்கள். மதுரையில் அதுதான் நடந்தது. நாளை உங்களுக்கும் பணம் கொடுப்பார்கள். மறுக்காதீர்கள், நோட்டு உங்களுக்கு, ஓட்டு எனக்கு என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications