தமிழகத்தில் அறிவிப்பில்லாத மின் தடை-ஜெ
சென்னை:தமிழகத்தில் அறிவிப்பில்லாத மின் தடை அமலில் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மின்சார வாரியம் பொன்விழா கொண்டாடி வரும் இந்த வேளையில், இவர்கள் செய்யும் மின்தடை எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் நடக்கிறது. இதனால் விவசாயிகள், தொழிற்சாலை நடத்துபவர்கள், படிப்பவர்கள், நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
அதிமுக ஆட்சியில் மின் தடையே கிடையாது. இப்போது இருக்கும் ஆட்சியில் தான் இந்த கூத்து நிகழ்கிறது. இதற்கு மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தான் காரணம்.
அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு தேவையான மின்சார அளவு 8,775 மெகாவாட். ஆனால் அப்போது உற்பத்தி செய்தது 10,098 மெகா வாட். தேவையை காட்டிலும் அதிகளவு மின் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையை எடுத்தது எங்கள் அரசுதான்.
ஆனால், மின் கட்டணத்தை மட்டும் சரியாக வசூலிக்கும் திமுக அரசு மின் உற்பத்தியில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.
முன்னறிவிப்பு இல்லாத மின் தடை, குறைவான மின் சப்ளை இருப்பதை நிவர்த்தி செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் மோட்டார்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கவும், நெசவாளிகள் குறிப்பிட்ட நேரத்தில் ஆர்டர்களை கொடுப்பதில் தாமதம் ஏற்படாமல் இருக்கவும் மைனாரிட்டி திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications