இப்படியே போனால் திமுகவுக்கு கஷ்டம்: சிபிஎம்
மதுரை:திமுகவினரின் அராஜகம், அட்டகாசம் தொடர்ந்து நீடித்தால், அதை முதல்வர் கருணாநிதி தொடர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் திமுக அரசுக்கு அதுவே பெரும் ஆபத்தைக் கொண்டு வந்து விடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
கூட்டுறவு சங்கத் தேர்தலில் நடந்த அராஜக வன்முறைகள், திமுகவினரின் அட்டகாசம் ஆகியவற்றைக் கண்டித்து மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வரதராஜன் தலைமை தாங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற கண்துடைப்பு கூட்டுறவு சங்க தேர்தலில் திமுக அரசின் அராஜகம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டால், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, இது சம்பந்தமாக என்னை தொடர்பு கொள்ள முடியவில்லை என சொல்லியுள்ளார். நான் என்ன தலைமறைவாகவா இருக்கிறேன்?
ஜனநாயக ரீதியாக தேர்தலை நடத்துங்கள், யாருக்கு பலம் இருக்குதோ அவர்கள் ஜெயிக்கட்டும் என்றோம். ஆனால் திமுக-வினரின் ஆடம்பர அட்டகாசம் தான் எல்லா இடத்திலும் தலை விரித்தாடுகிறது. திமுக ஆட்சியில் செய்யும் சில நல்ல காரியங்களையே திமுக-வினர் உரிமையாக கையில் எடுத்துக் கொண்டு அராஜக செயலில் ஈடுபடுவது ஆரோக்கியமான அரசியல் ஆகாது.
தமிழகத்தில் நடந்த 90 சதவீத கூட்டுறவு சங்க தேர்தல்களை ரத்து செய்து விட்டு மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் நடத்த வேண்டும். ஆளும் திமுக-வினரே தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை கலைஞர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், இதுவே அந்த கட்சிக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்றார் வரதராஜன்.












Click it and Unblock the Notifications