உள்ளாட்சித் தேர்தலையும் ரத்து செய்க: ஜெ.
சென்னை:கூட்டுறவுச் சங்கத் தேர்தலை ரத்து செய்தது போல உள்ளாட்சித் தேர்தலையும் ரத்து செய்து விட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டணிக் கட்சிகளின் கடுமையான எதிர்ப்பால் கூட்டுறவு சங்க தேர்தல்கள் ரத்து என்று தற்போது கருணாநிதி அறிவித்துள்ளார்.
முறைகேடுகளுடன்தான் தேர்தல் நடக்கும் என்பதை தெரிந்து கொண்டு கூட்டுறவு சங்கத் தேர்தலை அதிமுக புறக்கணிக்கும் என்று நான் அறிவித்திருந்தேன்.
கூட்டுறவு சங்கத் தேர்தலில் திமுகவினர் வரலாறு காணாத வன்முறைகளை நிகழ்த்தினர். அவர்களது கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தமிழகம் முழுவதும் திமுகவினர் தாக்குதல் நடத்தினர். இவற்றின் மூலம் கூட்டணிக் கட்சிகளே திமுகவை தீண்டத்தகாத கட்சி என்று நினைக்கும் அளவுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்துவதற்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டு இருக்கும், மனித சக்திகள் செலவழிக்கப்பட்டதோடு, அரசுத் துறையினர் இவற்றுக்காக பணியாற்ற பட்ட துயரங்கள் கணக்கில் அடங்காது.
கூட்டுறவு தேர்தல் தற்போது ரத்து செய்யப்பட்டிருப்பதால், திமுகதான் இந்த தேர்தலுக்கான செலவை அரசுக்குச் செலுத்த வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தல்களிலும் இத்தகைய ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகளாலேயே கடுமையான கண்டனத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளான உள்ளாட்சித் தேர்தலையும் ரத்து செய்து விட்டு மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
திமுக ஆட்சியில் நடைபெற்ற தேர்தல்கள் வன்முறை மற்றும் முறைடுகேடுகளால்தான் நடந்திருக்கிறது என்ற உண்மையை மக்கள் உணர்ந்து கொண்டு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications