மீண்டும் கொரில்லா யுத்தத்துக்கு தயாராகும் புலிகள்
கொழும்பு:இலங்கையின் கிழக்குப் பகுதியில் தங்கள் வசமிருந்த பெரும் பகுதியை ராணுவம் கைப்பற்றிவிட்டதையடுத்து மீண்டும் கொரில்லா தாக்குதலில் ஈடுபடப் போவதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் உள்ள தொப்பிகலா வனப் பகுதியை இலங்கை ராணுவத்தின் கமாண்டோ படையினர் நேற்று அதிரடியாக கைப்பற்றினர். மேலும் நரகமுலா, தரவிகுலமா ஆகிய பகுதிகளையும் ராணுவம் கைப்பற்றிவிட்டது. இங்கு தான் புலிகளின் கிழக்குப் பகுதிக்கான தலைமை முகாம் இருந்தது.
இப்போது இப் பகுதி ராணுவம் வசம் போய்விட்டதால் கிழக்கு இலங்கையில் புலிகள் பலவீனமடைந்துள்ளனர். மேலும் தொப்பிகலாவின் மேற்குப் பகுதியில் இருந்து புலிகள் பின்வாங்கிவிட்டனர்.
இதையடுத்து ராணுவ கமாண்டருக்கு அதிபர் ராஜபக்ஷே பாராட்டு தெரிவித்துள்ளார். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப் பகுதியை கைப்பற்றியதற்காக மக்களுடன் சேர்ந்து தாணும் ராணுவத்தினரையும் சிறப்புப் படையினரையும் போலீசாரையும் பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், தாங்கள் பின் வாங்கியிருப்பது மீண்டும் தாக்குதல் நடத்தவே என புலிகள் கூறியுள்ளனர். புலிகளின் ராணுவப் பிரிவின் செய்தித் தொடர்பார் ராசையா இளந்திரையன பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில்,
கிழக்குப் பகுதியில் ராணுவம் படிப்படியாக நுழைய ஆரம்பித்ததில் இருந்தே நாங்கள் மீண்டும் கொரில்லா தாக்குதலை தொடங்கிவிட்டோம். இலங்கையின் கிழக்கே போர் முடிந்துவிட்டதாக ராணுவம் கூறுகிறது. அது தவறு. நாங்கள் கொரில்லா தாக்குதலில் 24 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள்.
சில வாரங்களுக்கு முன்பே இப் பகுதியில் மீண்டும் கொரில்லா யுத்தத்துக்கு மாறிவிட்டோம். அதன் ஒரு பகுதியாகவே பின் வாங்கியிருக்கிறோம். ஒரு பகுதியை கைப்பற்றுவது பெரிதல்ல. அதை பாதுகாப்பது தான் பெரியது. நாங்கள் பொறுத்திருந்து எதையும் செய்ேவாம்.
அப்போது ராணுவம் வேறு சில பகுதிகளை இழக்க வேண்டி வரும். எங்களுக்கு கொரில்லா யுத்தத்தை தொடர்ந்து நடத்தும் வலிமை உண்டு என்றார்.
இது குறித்து ராணுவ விவகாரங்களுக்கான செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான கெகிலியே ரம்புகவல்லா கூறுகையில், அங்கும் இங்குமாக ராணுவத்தினரை புலிகள் தாக்குவார்கள். ஆனால், எதையும் எதிர்கொள்ள ராணுவம் தயாராகவே உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications