மதிமுக உயர் மட்டக் குழு உறுப்பினர் சபாபதி விலகல்:திமுகவில் இணைந்தார்
சென்னை:மதிமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் கட்சியின் உயர் மட்டக் குழுவின் உறுப்பினருமான மோகன் சபாபதி அக் கட்சியில் இருந்து விலகி இன்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அவருடன் 250 மதிமுகவினரும் திமுகவில் இணைந்தனர்.
அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சபாபதி பேசுகையில்,
13 ஆண்டுகளாக திமுகவுக்கு விரோதமாக செயல்பட்டு பல்வேறு கணைகளை எய்தபோதும் எங்களை மன்னித்து ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.
ஒரு இயக்கம் தோன்றுவது தவறல்ல. ஆனால், அந்த நாம் வெல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் இன்னொரு இயக்கத்தை வீழ்த்த வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படக் கூடாது.
அண்ணாவின் கொள்கைகளை வைகோ போயஸ் தோட்டத்தில் குழி தோண்டி புதைக்க முடிவு செய்துவிட்டார் என்றார்.
திமுகவில் இருந்து விலகி வைகோ மதிமுகவை உருவாக்கியபோது உடன் இருந்த முக்கிய தலைவர் மோகன் சபாபதி. அவர் கட்சியின் அரசியல் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராகவும் வைகோவின் முக்கிய ஆலோசகராகவும் இருந்தார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த சபாபதி, மிகச் சிறந்த பேச்சாளராவார்.
கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் வட சென்னையில் இருந்தும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் நெல்லிக்குப்பத்தில் இருந்தும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.
12 ஆண்டுகளாக வைகோவுடன் இருந்து வந்த அவர், செஞ்சி ராமச்சந்திரன் விலகியவுடன் அவர் வகித்த துணைப் பொதுச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்கும் என நினைத்திருந்தார். ஆனால், அந்தப் பதவியை மல்லை சத்யாவுக்கு வழங்கிவிட்டார் வைகோ.
இதையடுத்து ஜெயலலிதாவுடன் பேசி தனக்கு ராஜ்யசபா எம்பி பதவியையாவது வைேகா வாங்கித் தருவார் என நினைத்திருந்தார். ஆனால், அதுவும் கிடைக்கவில்லை.
இதனால் சமீபகாலமாக கட்சியில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த மதிமுக மண்டல மாநாட்டை இவர் தான் துவக்கி வைப்பதாக இருந்தது. ஆனால், அவர் மாநாட்டுக்கே வரவில்லை.
இதனால் விரைவிலேயே சபாபதி கட்சிக்கு டாடா காட்டலாம் என்று கருதப்பட்டது. இந் நிலையில் தனது ஆதரவாளர்களோடு திமுகவில் இணைந்துவிட்டார்.












Click it and Unblock the Notifications