சென்னை போலீஸில் அதிரடி மாற்றம்
சென்னை:சென்னை மாநகரில் பெருகி வரும் குற்றங்களை தடுக்கும் வகையில் பல காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். 3 பெண் அதிகாரிகள் துணை ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை நகரில் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டன. கிட்டத்தட்ட தினசரி ஒரு கொலை என்ற விகிதத்தில் கொலைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஒரு வாரத்தில் மட்டும் 12 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து காவல்துறையில் பெரும் களையெடுப்பு நடந்து வருகிறது. இதுவரை பல இன்ஸ்பெக்டர்கள், உதவி ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் துணை ஆணையாளர்கள் மட்டத்தில் களையெடுப்பு நடந்துள்ளது.
வண்ணாரப்பேட்டை, அடையாறு, கீழ்ப்பாக்கம், தியாகராய நகர் மற்றும் தென் சென்னை போக்குவரத்து காவல் ஆகியவற்றுக்கான துணை ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக காமினி நியமிக்கப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக விஜயக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். தி.நகர் துணை ஆணையராக லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். சேஷசாய், அடையாறு துணை ஆணையராகிறார்.
தென் சென்னை போக்குவரத்து துணை ஆணையராக ஆவடி காவல்படை கமாண்டர் சத்தியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக இருந்த ரவிக்குமார் டிஜிபி அலுவலக நிர்வாக உதவி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அடையாறு துணை ஆணையராக இருந்த மகேந்திர குமார் ரத்தோடு, ஆவடி விசேஷ காவல் படை கமாண்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தி.நகர் துணை ஆணையர் பாஸ்கரன், சென்னை சிலை திருட்டுப் பிரிவு எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் சென்னை போக்குவரத்து துணை ஆணையராக இருந்த பிரபாகரன், மதுரை போக்குவரத்து துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை நகரில் தற்போது 5 பெண் துணை ஆணையர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று சரகங்களைத் தவிர அண்ணா நகர், வடசென்னை போக்குவரத்து ஆகிய இடங்களிலும் பெண் துணை ஆணையர்களே உள்ளனர்.
இதுதவிர திருச்சி ரயில்வே எஸ்.பி. கார்த்திகேயன், கோவை எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். கோவை எஸ்.பி. துரைகுமார், திருச்சி ரயில்வே எஸ்.பி ஆகிறார்.












Click it and Unblock the Notifications