சில்லறை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள்:கம்யூ. பாணியில் தடுக்க தமிழக அரசு முடிவு
சென்னை:சில்லறை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் நுழைவதைத் தடுக்க கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் கடைப்பிடிக்கும் முறை தமிழகத்திலும் கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் கூட்டுறவு மற்றும் உணவுத் துறைகளுக்கான ஆய்வுக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடந்தது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள், சில்லறை வணிகத்தில் நுழைவதைத் தடுக்க கேரளா மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் முறைகள் குறித்து ஆராயப்படும்.
அங்கு நடைமுறைப்படுத்தப்படும் முறை தமிழகத்திலும் அமல்படுத்ப்படும். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள சில்லறை வணிகர்களின் நலன் காக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது..
மேலும் கூட்டுறவுத் தேர்தல்களை நடத்துவதற்காக தனியாக தேர்தல் ஆணையம் அமைக்கவும் இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது முடிவெடுக்கப்பட்டது.
சமீபத்தில் நடந்த முதல் கட்ட கூட்டுறவுத் தேர்தலில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததும், இதையடுத்து திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதையடுத்து தேர்தலையே ரத்து செய்து உத்தரவிட்டார் கருணாநிதி என்பது நினைவிருக்கலாம்.
இதுதவிர இலவச காஸ் அடுப்பு திட்டத்தின் கீழ் பயன் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை 5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
விவசாயிகளுக்கு பாசனக் கடன் வழங்குவதற்காக தஞ்சாவூர் கூட்டுறவு வங்கிக்கு ரூ. 15 கோடியும், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு ரூ. 25 கோடி நிதியுதவியும் அளிக்கப்படவுள்ளது என்று அரசின் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications