27% இட ஒதுக்கீடு-அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும்
டெல்லி:பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இச்சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனால் நடப்பாண்டில் இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந் நிலையில் இடைக்காலத் தடையை நீக்கக் கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்தது. இந்த மனு மீது வருகிற 31ம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பான பிரதான மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 7ம் தேதி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வரும் என்று தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் இன்று அறிவித்தார்.












Click it and Unblock the Notifications