துணை ஜனாதிபதி யார்? - போலீஸ் தேர்வில் குழப்ப கேள்வி!
சென்னை:போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வில் இந்தியாவின் துணை ஜனாதிபதி யார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு என்ன பதில் அளிப்பது என்று தெரியாமல் தேர்வெழுதியவர்கள் குழம்பினர்.
சமீபத்தில்தான் குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தது. பிரதீபா பாட்டீல் வெற்றி பெற்று நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவராகியுள்ளார். தேர்தல் முடிந்ததும், தோல்வி அடைந்த துணை குடியரசுத் தலைவரான பைரான் சிங் ஷெகாவத் ராஜினாமா செய்து விட்டார்.
இதனால் தற்போது துணை குடியரசுத் தலைவர் பதவி காலியாக உள்ளது. அந்தப் பதவிக்கு ஆகஸ்ட் 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இந் நிலையில் தமிழகத்தில் நேற்று ஆண், பெண் காவலர்களைத் தேர்வு செய்ய எழுத்துத் தேர்வு நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த கேள்வி, தேர்வு எழுதியவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது.
துணை குடியரசுத் தலைவர் யார் என்ற அந்தக் கேள்விக்கு சோனியா காந்தி, பைரான் சிங் ஷெகாவத், சிவராஜ் பாட்டீல், அப்துல் கலாம் ஆகிய நான்கு பதில்கள் தரப்பட்டு ஒரு பதிலைத் தேர்வு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஷெகாவத் ராஜினாமா செய்து விட்டதால் இந்தக் ேகள்விக்கு என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் விழித்தனர்.
இதுகுறித்து தேர்வு ஹாலில் இருந்த அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுகுறித்து உயர் அதிகாரிகள்தான் இறுதி முடிவு எடுக்க முடியும். அனேகமாக இந்தக் கேள்விக்கு பதில் எழுதியவர்களுக்கு முழு மதிப்பெண் கொடுக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தனர்.
இது ஒன்றுதான் கடினமான கேள்வியாக இருந்தது. மற்றபடி பிற கேள்விகள் அனைத்தும் படு ஈசியாக இருந்ததாக தேர்வு எழுதி விட்டு வெளியே வந்தவர்கள் படு சந்தோஷமாக கூறினர்.












Click it and Unblock the Notifications