ராமதாஸ் ஓகே.. விஜய்காந்த் நோ..: ஜெயலலிதா
சென்னை:குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக, மதிமுகவினர் மட்டும் வாக்களிக்கவில்லை. மாறாக, தெலுங்கு தேசம், சமாஜ்வாடி, அஸ்ஸாம் கன பரிஷத் கட்சி ஆகிய 3வது அணியைச் சேர்ந்த பிற கட்சியினரும் கூட வாக்களித்தனர் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி மாணவ, மாணவியருக்காக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடந்தது. ஜெயலலிதா பரிசுகளை வழங்கினார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தங்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டன. மொத்தம் 38 பவுன் தங்க டாலர்கள் பரிசளிக்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜெயலலிதா. அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு ஜெயலலிதா அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: 3வது அணியில் இன்னும் அதிமுக நீடிக்கிறதா?
ஜெ.: இன்னும் நாங்கள் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம்.
கேள்வி: உங்களது கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் திடீரென வாக்களித்தது குறித்து ..?
ஜெ.: நாங்கள் மட்டும் வாக்களிக்கவில்லை. 3வது அணியில் உள்ள சமாஜ்வாடிக் கட்சியினர் வாக்களித்துள்ளனர், தெலுங்கு தேசம் வாக்களித்துள்ளது. அஸ்ஸாம் கன பரிஷத் கட்சியினரும் ஓட்டுப் போட்டுள்ளனர். சவுதாலா கட்சியைச் சேர்ந்தவர்களும் கூட வாக்களித்துள்ளனர். அதுபோலவே அதிமுக, மதிமுக எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் வாக்களித்துள்ளனர்.
எனவே யாரும் இதில் விதி விலக்கல்ல. ஆனால், அதிமுகவை மட்டும் குறி வைத்து பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுவது புரியவில்லை. இதுகுறித்து எல்லா பத்திரிகைகளும் விலாவாரியாக எழுதி முடித்து விட்டன. இத்தோடு இப்பிரச்சினையை விட்டு விடலாம் என எண்ணுகிறேன்.
கேள்வி: உங்களது கட்சி எம்.எல்.ஏக்கள் நான்கு பேர் பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவாக வாக்களித்தனரா?
ஜெ.: அதுகுறித்து எனக்குத் தெரியாது.
கேள்வி: மதிமுகவுடன் உறவு எப்படி உள்ளது?
ஜெ.: எப்போதும் போலத்தான் உள்ளது.
கேள்வி: ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணிக்கும், இடது சாரிகளுக்கும் உறவு எப்படி உள்ளது?
ஜெ.: உறவில் முன்னேற்றம் இருக்கும். இதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கேள்வி: அதிமுக ஆட்சியின்போது கேபிள் டிவி சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது அதை திமுக எதிர்த்தது. இப்போது கேபிள் டிவியை அரசுடமையாக்க திமுக முடிவு செய்துள்ளதே?
ஜெ.: இதுகுறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும். அரசே கேபிள் டிவியை நடத்தும் என்பது வர்த்தக ரீதியிலான சுயநலன்தான்.
கேள்வி: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தீர்களே?
ஜெ.: நான் அழைப்பு விடுக்கவில்லை. இதுபோன்ற செய்தியாளர் சந்திப்பின்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் அளித்தேன், அவ்வளவுதான்.
கேள்வி: ராமதாஸுக்கு நீங்கள் அளித்த பதில் விஜயகாந்த்துக்குப் பொருந்துமா?
ஜெ.: அதற்கு இது பொருந்தாது. இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க விரும்பவில்லை என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications