கோவையில் ஆயுதப் போலீசார் குவிப்பு:சிறை பாதுகாப்புக்கு கமாண்டோ படை
கோவை:கோவையில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் வெளியிடப்பட இருப்பதால் கோவை மாநகருக்கு பல மாவட்டங்களில் இருந்தும் ஆயுதப் படை போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கோவை சிறையின் பாதுகாப்புக்காக கமாண்டோ படையினர் விரைந்துள்ளனர்.
கடந்த 1998ல் கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் பலியாகினர். சுமார் 250 பேர் படுகாயமடைந்தனர். சுமார் ரூ.18 கோடி ரூபாய் அளவிற்கு பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தன.
இந்த குண்டு வெடிப்பில் 1ம் தேதி முதல் தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக அல் உம்மா பாஷா உள்பட 153 குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். கேரள ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி உள்பட 8 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.
இதனால் கோவை மாநகரம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மாவட்ட எல்லைகளில் உள்ள அனைத்து செக் போஸ்ட்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை, சேலம், மதுரை, பாளையங்கோட்டை, வேலூர், திருச்சி என தமிழகத்தின் அனைத்து மத்திய சிறைகளிலும் கமாண்டோ பயிற்சி பெற்ற காவலர்கள் கோவை மத்திய சிறைக்கு பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து மத்திய சிறைகளிலிருந்தும் தலா 10 கமாண்டோ படை வீரர்கள் கோவைக்கு விரைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்கும் வரை கோவையில் தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் நகர் முழுவதும் பாதுகாப்புக்கா அதிரடிப் படை போலீசாரும், ஆயுதப் படை போலீசாரும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications