கிருஷ்ணகிரியில் ரூ. 2300 கோடியில் ஜிஎம்ஆர்தொழில் மண்டலம்: 70,000 பேருக்கு வேலை!!
சென்னை:இந்தியாவின் முன்னணி கட்டுமான நிறுவனமான பெங்களூரைச் சேர்ந்த ஜிஎம்ஆர், தமிழக அரசுடன் இணைந்து ரூ. 2,300 கோடி மதிப்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைக்கவுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் இன்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது. தமிழக தொழில்துறை வளர்ச்சிக் கழகத் தலைவர் ராமசுந்தரமும், ஜிஎம்ஆர் நிறுவன இயக்குனர் நாகேஸ்வர ராவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த பொருளாதார மண்டலத்தில் பல்வேறு பொருட்களின் உற்பத்திப் பிரிவுகள் அமைக்கப்படும். சுமார் 1,330 ஹெக்டேர் பரப்பளவில் அமையவுள்ள இந்த பொருளாதார மண்டலம் மிகவும் பிற்பட்ட தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பெருமளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமையவிருக்கும் இந்த பொருளாதார மண்டலத்தில் முன்னணி மின்னணு, ஜவுளி, பொறியியல் துறை நிறுவனங்கள் தொழிற்சாலைகளைத் தொடங்கவுள்ளன.
சுமார் ரூ. 11,000 கோடி அளவுக்கு முதலீட்டை ஈர்க்கும் வகையில் இந்த பொருளாதார மண்டலம் உருவாக்கப்படவுள்ளது. 70,000 பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் இந்த மண்டலத்தில் இருந்து ஆண்டுக்கு ரூ. 16,000 கோடி மதிப்புள்ள பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படும் என ராவ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications