டாடா திட்டத்தை எதிர்ப்பது தவறு: எக்ஸ் ராஜாராம்
சென்னை:டாடாவின் டைட்டானியம் டை ஆக்சைடு திட்டத்திற்கு எதிரான பிரசாரம் தேவையற்றது, தவறானது. இதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறார்கள் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் க.ராஜாராம் கூறியுள்ளார்.
மறைந்த எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சர், சபாநாயகர் என பல பொறுப்புகளை வகித்தவர் ராஜாராம். இவர் டைட்டானியம் டை ஆக்சைடு திட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 30 வருடங்களாக கனிம வளத்தை எடுத்து விற்கும் தொழில் நடந்து வருகிறது. 59க்கும் மேற்பட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவர்களால் அந்தப் பகுதி மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை. எந்த லாபமும் இல்லை. அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரவில்லை.
ஆனால் டாடா ஸ்டீல் நிறுவனம், ரூ. 2500 கோடி முதலீட்டிலான தனது திட்டத்தை இங்கு நிறைவேற்றினால், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அபரிமிதமாக கிடைக்கும். உள்ளூர் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் மேம்பாடு அடையும்.
டாடா நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்தால், அப்பகுதி பாலைவனமாகி விடும் என்று கூறுவது அபத்தமானது. அது தவறான பிரசாரம். இந்தத் திட்டத்தால் அப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம்தான் உயருமே தவிர வேறு தீங்கு எதுவும் நடந்து விடாது. எனவே இந்தத் திட்டத்தை யாரும் எதிர்க்கக் கூடாது என்று கூறியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications