ஜெயலலிதாவுக்கு கோ.சி.மணி கடும் கண்டனம்
சென்னை:விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தராததை கண்டித்து நாகை மாவட்டத்தில் போராட்டம் நடத்தப் போவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து கோ.சி.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாகப்பட்டிணம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படவில்லை என்று காரணம் சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ஜெயலலிதா வழக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இவர் ஆட்சியின் போது என்ன நடந்தது, இப்போது என்ன நடக்கின்றது என்று இவருக்கு தெரியுமா. தகுந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு பேசினால் நாங்கள் நம்புவோம். எந்த விபரமும் இல்லாமல் அறிக்கை விடுவதுதான் ஜெயலலிதாவின் வேலை.
கடந்த 2006-07ம் ஆண்டில் கூட்டுறவு வங்கிகள் தமிழகம் முழுவதும் ரூ. 1250.62 கோடியை பயிர்க் கடனாக 6,31,283 விவசாயிகளுக்கு வழங்கியுள்ளன.
நடப்பு நிதியாண்டான 2007-08ல் ரூ. 1,360 கோடி பயிர்க் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
2007-08ம் ஆண்டில் முதல் காலாண்டு பங்குத் தொகையாக அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் மொத்தமாக ரூ. 187.50 கோடியும், வட்டியாக ரூ. 58.50 கோடியும் வழங்கப்படவுள்ளது. இது அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
நடப்பாண்டில் 2வது காலாண்டில் கொடுக்கப்பட்ட பயிர்க் கடன் மூலம் இதுவரை 1,20,791 விவசாயிகள் பயனடைந்துள்ளார்கள்.
கடந்த அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய இடங்களில் 2005-06ல் ரூ. 65.76 கோடி மட்டும் பயிர்க் கடனாக கொடுக்கப்பட்டது.
ஜெயலலிதா ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அறிவித்துள்ள நாகை மாவட்டத்தில், அம்மையாரின் 5 ஆண்டு கால ஆட்சியில் மொத்தமாக கொடுக்கப்பட்ட பயிர்க் கடன் தொகை ரூ.92 கோடி மட்டுமே.
திமுக ஆட்சியில் கடந்த நிதியாண்டில் மட்டும் கொடுக்கப்பட்டுள்ள பயிர்க் கடன் தொகை ஜெயலலிதாவின் 5 ஆண்டு கால ஆட்சியில் கொடுக்கப்பட்ட மொத்த பயிர்க்கடன் தொகையில் கிட்டத்திட்ட 50 சதவீதம் ஆகும்.
இது கூடத் தெரியாமல் நாகை மாவட்டத்தில் நான் போராட்டம் நடத்த போகிறேன் என்று கூக்குரல் போடும் ஜெயலலிதாவுக்கு அம்மாவட்ட விவசாயிகள் நல்ல பதிலை சொல்வார்கள் என்று கோ.சி.மணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications