வளர்ச்சிப் பாதையில் தமிழகம் - சோனியா பாராட்டு
மதுரைதமிழகம் அனைத்துத் துறைகளிலும் பெரும் வளர்ச்சியில் உள்ளது. முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழகம் மேலும் பல வளர்ச்சிகளை அடையும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
ராமேஸ்வரம் - மானாமதுரை இடையே அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை நேற்று சோனியா காந்தி, மதுரையில் நடந்த கோலாகல விழாவில் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை பச்சைக் கொடி காட்டித் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் லாலு பிரசாத் யாதவ், ப.சிதம்பரம், ஆர்.வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சோனியா காந்தி பேசுகையில், முதல்வர் கருணாநிதியின் சீரிய தலைமையின் கீழ் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பீடு நடை போட்டு வருகிறது. மிகுந்த உறுதியோடும், சாதனைகளோடும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
முதல்வர் கருணாநிதி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தூண். அவர் ஒரு மூத்த அரசியல் நிபுணர். அவரை சந்திப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.
முதல்வர் கருணாநிதியின் தலைமையில் தமிழகம் பெரும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தனக்கென தனித்துவம் கொண்டு உறுதியான மாநிலமாக உருவெடுத்துள்ளது. பிற மாநிலங்களுக்கு சிறந்த உதாரணமாக தமிழகம் விளங்குகிறது.
மக்களின் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை மேலும் பெறும் வகையில் இங்குள்ள அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
திமுக அரசுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், மத்திய அரசும் முழு ஆதரவுடன் உள்ளன. தமிழகத்தின் தேவைகளை நிறைவேற்ற முழு மூச்சுடன் உதவி வருகின்றன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிக்கு வந்த பின்னர் மீட்டர் கேஜ் பாதைகளை அகலப் பாதைகளாக மாற்றும் பணிகள் வேகம் பிடித்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 25 புதிய பாதைகள் அமைக்கும் பணி, அகலப் பாதைப் பணிகள், மின் மயமாக்கல் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த விழா முதலில் ராமேஸ்வரத்தில் நடப்பதாக இருந்தது. ஆனால் பக்தர்களுக்கு இடையூறு தரக் கூடாது என்பதற்காகவே மதுரையில் நடக்கிறது. மதுரை பாரம்பரியம் மிக்க நகரம். தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமாக திகழும் உலகப் புகழ் பெற்றநகரம்.
தென்னாட்டு காசி எனப்படும் ராமேஸ்வரத்திற்கும், மானாமதுரைக்கும் இடையிலான அகல ரயில் பாதையினால் அந்தப் பகுதி மக்கள் மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான பயணிகள், பக்தர்கள் பயன் அடைவார்கள்.
கடந்த 3 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இந்த சேவைகள் மற்றும் பணிகளால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்காக ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத்துக்கும், ரயில்வே குடும்பப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் சோனியா காந்தி.












Click it and Unblock the Notifications