நிலத்துக்கு சந்தை விலை- வீட்டுக்கு ஒரு வேலைபொன்முடி குழுவிடம் மக்கள் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:டாடாவின் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலைக்கான நிலத்தை தர வேண்டும் என்றால் கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு மார்க்கெட் விலை தர வேண்டும், குடும்பத்திற்கு ஒருவருக்கு கட்டாயம் வேலை தர வேண்டும் என்று சாத்தான்குளம் பகுதி மக்கள் அமைச்சர் பொன்முடி தலைமையிலான அரசுக் குழுவிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்தக் குழு இன்று ஆலை அமையவுள்ள சாத்தான்குளம் பகுதியில் மக்களை சந்தித்தது. ஏற்கனவே அரசுத் தயாரிப்பில் தயாரித்துக் கொண்டு வரப்பட்டிருந்த ஒரு நோட்டீஸ் மக்களிடம் தரப்பட்டது.

அதில், டைட்டானியம் திட்டத்தை இப்பகுதியில் செயல்படுத்தலாமா, வேண்டாமா, வேண்டாம் என்றால் என்ன காரணத்திற்காக எதிர்க்கிறீர்கள், திட்டத்திற்காக நிலத்தை கொடுக்க முன் வருகிறீர்களா, அப்படியானால் அதற்கு என்ன விலையை எதிர்பார்க்கிறீர்கள் என்று பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அவற்றை நிரப்பித் தருமாறு மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

பின்னர் மக்கள் அரசுக் குழுவிடம் பேச அனுமதிக்கப்பட்டது. அப்போது கிராமத்தினர் சார்பில் முக்கியமாக இரு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அதாவது நிலத்தை கையகப்படுத்துவதாக இருந்தால் அதற்கு மார்க்கெட் கட்டணத்தைத்தான் கொடுக்க வேண்டும். குறைத்துக் கொடுத்தால் ஏற்க மாட்டோம்.

நிலம் வழங்குவோரின் குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் வேலை தர வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை அரசு தர வேண்டும் என்று மக்கள் சார்பில் அரசுக் குழுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

பெரும்பாலானவர்கள் இந்தக் கோரிக்கைகளையே முன் வைத்தனர்.

ஆலையால் பாதிப்பு வராது - பொன்முடி

முன்னதாக குலசேகரப்பட்டி, தட்டார்மடம், சிறுநாடார் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் சமுதாய கூடங்களில் இந்தக் குழு பொது மக்களை சந்தித்தது.

அப்போது அமைச்சர் பொன்முடி பேசுகையில்,

டாடா தொழிற்சாலை விஷயத்தில் பொது மக்களை சிலர் குழப்பியுள்ளனர். இதில் யாருக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் எங்களிடம் கேள்வி கேட்கலாம்.

சந்தேகம் கேட்டாலோ அல்லது கருத்து சொன்னாலோ அரசு ஏதாவது செய்துவிடுமே என்ற பயம் வேண்டாம். மனசாட்சிப்படி நீங்கள் நினைத்துள்ளதை சொல்லுங்கள். சொல்ல விருப்பமில்லாதவர்கள் உங்களிடம் கொடுக்கப்பட்ட படிவத்தில் கருத்துக்களை எழுதிக் கொடுக்கலாம்.

உங்களுடைய நிலத்தை கட்டாயப்படுத்தி பிடுங்கி டாடா நிறுவனத்திற்கு தமிழக அரசு கொடுக்காது.

இந்த பகுதியில் கடந்த மாத நிலவரப்படி நில மதிப்புப் பட்டியலில் ஒரு ஏக்கர் நிலம் ரூ.60,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதற்கு மேல் எவ்வளவு வேண்டுமோ அதை கேளுங்கள்.

சிலர் சொல்வதை போல இந்த பகுதியில் கட்டிடங்களோ, வீடுகளோ இடிக்கப்பட மாட்டாது.

இந்தப் பகுதியில் இடம் கொடுப்பவர்களுடைய குடும்பத்தினருக்கு டாடா தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். எனவே நீங்கள் உங்களுடைய எதிர்கால சந்ததியினரை நினைவில் கொண்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.

இந்த தொழிற்சாலையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். முதல்வர் கருணாநிதியும் இதையே தான் விரும்புகிறார். வேறு யாராவது உங்களை மிரட்டுவார்கள் என்று பயப்பட வேண்டாம் என்றார்.

கூட்டத்தில் சிலர், கனிம வளத்தை எடுத்தபின்பு அந்த நிலத்தை என்ன செய்வார்கள் என்று கேள்வி கேட்டனர்.

அதற்கு அமைச்சர் பொன்முடி, கனிமவள சட்டப்படி எந்த இடத்தில் சுரங்கம் தோண்டினாலும் அந்த இடத்தை மீண்டும் மணலை போட்டு நிரப்ப வேண்டும் என்பது விதி. அப்படி மணலை போட்டு நிரப்பும் இடத்தை மீண்டும் விவசாயத்திற்கு பயன்படுமாறு ஏற்பாடு செய்து, அதை மக்களுக்கே வழங்கப்படும் என்றார்.

ஏக்கருக்கு ரூ.5 லட்சம் கொடுத்தால் ஓ.கே:

சிறுநாடார் குடியிருப்பைச் சேர்ந்தவர்களான ஜெயபாலன், சுடர்பிரகாஷ், தேவதாஸ், சுதா, பட்டுக்கனி உட்பட பலர் தாங்கள் மனப்பூர்வமாக நிலம் கொடுக்க சம்மதிக்கிறோம் என்றும், ஆனால் எங்களுக்கு 1 ஏக்கருக்கு ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று எழுதிக் கொடுத்தனர்.

வேதகோட்டை விளையைச் சேர்ந்த மணப்பாடு சேகபுத்திரன், பூர்ணதாஸ் உட்பட சிலர் நிலம் கொடுக்க விருப்பமில்லை என்று கருத்து தெரிவித்தனர்.

நாளை காலை இந்தக் குழு தச்சமொழி வருவாய், புதுக்குளம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் கருத்து கேட்கவுள்ளது.

பின்னர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொது நல அமைப்புகள், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளை இந்தக் குழு சந்திக்கவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+