வந்தது கலைஞர் டிவி .. ராஜ் டிவி மாயம்!
சென்னை:திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள கலைஞர் டிவியின் சோதனை ஒளிபரப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது. அதேசமயம், ராஜ் டிவி பல பகுதிகளில் தெரியவில்லை என பொதுமக்களும், கேபிள் டிவி ஆபரேட்டர்களும் புகார் கூறியுள்ளனர்.
திமுகவுக்கும், சன் டிவிக்குமான உறவு முறிந்ததைத் தொடர்ந்து கட்சிக்கென தனி டிவி தொடங்கப்பட வேண்டும் என திமுக முன்னணித் தலைவர்கள் கருதினர். இதையடுத்து கலைஞர் டிவி உதயமானது.
இந்த டிவியை தொடங்குவதற்கான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் ராஜ் டிவி செய்து வந்தது. செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் டிவி தனது ஒளிபரப்பை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று முதல் சோதனை ஒளிபரப்பு தொடங்கியுள்ளது. நேற்று மாலை 5.30 மணி முதல் கலைஞர் டிவி தெரியத் தொடங்கியுள்ளது. திரைப்படப் பாடல்கள் அதில் ஒளிபரப்பாகி வருகின்றன.
மஞ்சள், ஆரஞ்சுப் பின்னணியில், கலைஞர் என்ற பெயருடன் கூடிய லோகோவுடன் கலைஞர் டிவி உள்ளது.
கலைஞர் டிவி தெரியத் தொடங்கியுள்ள அதே நேரத்தில் ராஜ் டிவி பல பகுதிகளில் தெரியவில்லை. குறிப்பாக கருப்பு வெள்ளை டிவி பெட்டிகள் வைத்துள்ளவர்களுக்கு ராஜ் டிவி சுத்தமாகத் தெரியவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் காயல் இளவரசு கூறுகையில் தமிழகத்தில் எஸ்.சி.வி.தான் பெரும்பாலான கேபிள் இணைப்புகளை கட்டுப்படுத்தி வருகிறது.
கலைஞர் டிவி எஸ் 10 அலைவரிசையில் ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் இதே அலை வரிசையில்தான் முன்பு ராஜ் டிவி ஒளிபரப்பாகி வந்தது. தற்போது ராஜ் டிவியை தூக்கி விட்டு அந்த இடத்தை கலைஞர் டிவிக்கு எஸ்.சி.வி. கொடுத்துள்ளது.
ராஜ் டிவி எஸ் 3 அலைவரிசைக்கு மாற்றப்பட்டுள்ளது. வீரியம் குறைந்த அலைவரிசை இது என்பதால் பலருக்கு இந்த டிவியைப் பார்க்க இயலாது.
அதேசமயம், சில இடங்களில் ராஜ் டிவி தெரிகிறது, கலைஞர் டிவி தெரியவில்லை. சில இடங்களில் இரண்டு சேனல்களுமே தெரியவில்லை.
எஸ்.சி.வி.தான் இதற்குக் காரணம் என தங்களை நாடும் பொதுமக்களிடம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூறுகின்றனர். விரைவில் இந்தக் குழப்பம் நீங்க, கலைஞர் டிவி மற்றும் ராஜ் டிவி ஆகிய இரண்டையும் பிரைம் அலைவரிசையில் ஒளிபரப்ப எஸ்.சி.வி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என காயல் இளவரசு கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications