நாளை கோவையில் அதிமுக போராட்டம்
சென்னை:கோவை மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரி நாளை கோவையில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவை மாவட்டம், தொண்டமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் நகராட்சியில் வாழும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக எனது ஆட்சி காலத்தில் ரூ. 30 கோடியே 38 லட்சம் மதிப்பில் கவுண்டம்பாளையம் வடவள்ளி கூட்டு குடிநீர்த் திட்டம் கொண்டு வரப்பட்டு அதற்காக கடந்த 22-02-2006 அன்று டெண்டர் விடப்பட்டது.
ஆனால் அடுத்து திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அந்த டெண்டரை ரத்து செய்து, புதிதாக மறு டெண்டர் கோரியது. ஆனால் அந்த கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக இதுவரை எந்த பணிகளும் நடைபெறவில்லை.
எனது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நல்ல பல திட்டங்களை என்னை பழிவாங்குவதற்காக தடுத்தி நிறுத்தி மக்களை கஷ்டப்படுத்தி வேடிக்கை பார்க்கிறது திமுக அரசு. இதனால் மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய குடிநீர் கூட இந்த ஆட்சியில் கிடைக்கவில்லை.
ஆகவே பொது மக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீரை கிடைக்க விடாமல் தடுத்த திமுக அரசை கண்டித்தும், பொதுமக்கள் நலன் கருதி எனது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம் கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திருப்பூர் சி.சிவசாமி முன்னிலையிலும், எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலும் கவுண்டம்பாளையத்தில் நாளை காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பொதுமக்களின் குடிநீர் தேவையை வலியுறுத்தி நாளை நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் பெரும் அளவில் கலந்து கொள்ளவேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications