பிரபல ரவுடி திண்டுக்கல் பாண்டியன் கைது!
சென்னை:சென்னையில் தனது கூட்டாளிகளுடன் காரில் உட்கார்ந்து கடத்தல் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்த பிரபல ரவுடி திண்டுக்கல் பாண்டியனை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையராக நாஞ்சில் குமரன் வந்தது முதல் நகரில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஷிப்ட் முறையில் போலீஸார் இரவு பகலாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ரவுடிகளும் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவில் மயிலாப்பூரில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இன்ஸ்பெக்டர்கள் சங்கரலிங்கம், ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய படைக்கு, ஒரு தகவல் வந்தது.
ஒரு ரவுடிக் கும்பல், நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து யாரையோ கடத்தத் திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக அந்தத் தகவல் கூறியது. இதையடுத்து சாந்தோம் பகுதிக்குப் போலீஸார் விரைந்தனர். அங்குள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலை முற்றுகையிட்டனர்.
அப்ேபாது ஹோட்டல் வளாகத்தில் இருந்த ஒரு சொகுசு காருக்குள் சிலர் அமர்ந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காரை போலீஸார் வளைத்தனர். அப்போது காருக்குள் 7 பேர் இருந்தது தெரிய வந்தது. அனைவரும் பயங்கர ரவுடிகள். ஏராளமான ஆயுதங்களுடன் அவர்கள் காரில் அமர்ந்திருந்தனர்.
இவர்களில் திண்டுக்கல் பாண்டியன்தான் இந்த ரவுடிக் கும்பலின் தலைவன். இவன் ஒரு பிரபல ரவுடி. திண்டுக்கல்தான் இவனது சொந்த ஊர். ஆனால் தமிழ்நாடு பூராவும் ரவுடித்தனத்தில் ஈடுபட்டு வந்தான். சென்னை பாண்டியன் என்றும் இவனுக்கு செல்லப் பெயர் உண்டு. பல கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் இவன் மீது உள்ளது.
திண்டுக்கல் பாண்டியனோடு அவனது கூட்டாளிகள் சுரேஷ்குமார், ரமேஷ், மெட்ரோ வெங்கடேசன், நந்தகோபால், செல்வக்குமார், தனசேகர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து கத்தி, கடப்பாரை, அரிவாள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
எதற்காக இங்கு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் என்று விசாரித்தபோது, ஒரு தொழிலதிபரைக் கடத்திச் செல்லத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அவர்களது காரில் பல வீட்டுப் பத்திரங்கள் இருந்ததும் தெரிய வந்தது.
பாண்டியன் மீது ஏற்கனவே சென்னை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல்லில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, கடத்தல், பிக்பாக்கெட் என 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2004ம் ஆண்டு இவரும், கூட்டாளி ரமேஷும் திருவேற்காட்டில் ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தனர்.
அப்போது குண்டு வெடித்து விட்டது. இதையடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலையாகி வந்தனர்.
அதன் பின்னர் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகரிடம் தஞ்சம் அடைந்தான் பாண்டியன் அவர் ஒரு அரசியல் புள்ளி. ரியல் எஸ்டேட் தொழிலையும் அமோகமாக செய்து வருகிறார். தனது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள அவரையே அணுகி வந்தான் பாண்டியன்.
அதேபோல பாண்டியன் வைத்து தனது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டார் அந்த அரசியல் புள்ளி.
தொழிலதிபர்களை கடத்தத் திட்டம்:
ரியல் எஸ்டேட் பிசினஸில் நிலத்தை விற்க முன்வராதவர்களை கடத்தி நிலத்தை எழுதி வாங்குவதும், பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பவர்களிடமிருந்து பணத்தை மிரட்டி வாங்குவதையும் செய்து வந்துள்ளான் பாண்டியன்.
தற்போதும் கூட ஒரு முக்கிய தொழிலதிபரைக் கடத்தும் திட்டத்தில்தான் பாண்டியன் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் யார் என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை.
கைது செய்யப்பட்ட திண்டுக்கல் பாண்டியன் மற்றும் அவனது கூட்டாளிகளை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications