படுக்கை அறையில் சிலிண்டர் வெடித்துதாய், 2 குழந்தைகள் சாவு: தற்கொலை முயற்சியா?
சென்னை: சென்னை போரூரில் படுக்கை அறையில் காஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பெரும் விபத்தில் பெண் மற்றும் அவரது இரு குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். அப்பெண்ணின் கணவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் நமச்சிவாயம். இவரது மனைவி ரூபா. இருவரும் தற்போது நியூசிலாந்தில் உள்ளனர். இவர்களின் மகன் ராஜு (40). ராஜுவின் சகோதரர்கள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ளனர்.
ராஜு, தனது மனைவி கீதா (32), குழந்தைகள் ராகவ் (10), ரேணுகா (4) ஆகியோருடன் போரூர் சக்தி நகரில் வசித்து வந்தார்.
![]() |
மேற்கு மாம்பலத்தில் மாவுமில் நடத்தி வந்தார் ராஜு. அதில் சரியான வருமானம் இல்லை என்று தெரிகிறது. மேலும் பெற்றோர் மற்றும் சகோதரர் வழியில் எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது. இதனால் வெளியில் நிறைய கடன் வாங்கியிருக்கிறார். இதைக் கட்ட முடியாமல் திணறி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை ராஜூவின் வீட்டிலிருந்து பயங்கர சப்தம் கேட்டுள்ளது. பின்னர் வீட்டுக்குள்ளிலிருந்து குபுகுபுவென புகையும் வந்துள்ளது. இதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.
வீட்டு உரிமையாளர் சண்முகமும் மேலிருந்து இறங்கி வந்தார். உள்ளே தீ எரிந்து கொண்டிருந்ததால், போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார், தீயணைப்புப் படையினருடன் விரைந்து வந்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது படுக்கை அறையில் கீதா, ரேணுகா, ராகவ் ஆகியோர் கருகி பிணமாகக் கிடந்தனர். ராஜு படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
படுக்கை அறையிலிருந்து காஸ் சிலிண்டர் கைப்பற்றப்பட்டது. சமையலறையில் இருக்க வேண்டிய காஸ் சிலிண்டர் எப்படி படுக்கை அறைக்கு வந்தது என்பது தெரியவில்லை. எனவே இது தற்கொலை முயற்சியாக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
ராஜு குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ராஜு குடும்பம் குறித்து வீட்டு உரிமையாளர் சண்முகம் கூறுகையில், ராஜூவுக்கும் அவரின் மனைவிக்கும் எப்போதாவது சின்ன சண்டை நடக்கும். அவர் இதுவரை வாடகை பாக்கி வைத்தது கிடையாது. கடன் கொடுத்ததாக கூறிக் கொண்டு யாரும் அவரை வீட்டுக்கு வந்து திட்டியதில்லை என்றார்.
இந்த சம்பவம் குறித்து போரூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.













Click it and Unblock the Notifications