புரிந்தும் புரியாத சரத்குமார்- கருணாநிதி தாக்கு:விஜய்காந்துக்கும் பாராட்டு
சென்னை:அரசு கேபிள் டிவி தொடர்பாக ஒரு சிலரின் வற்புறுத்தலின் காரணமாகத் தான் சரத்குமார் அரசை கேள்வி கேட்டு அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்,
கேள்வி: அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் வீடுகளுக்கு நேரடியாக இணைப்பு வழங்காது என்று திரும்பத் திரும்ப விளக்கங்கள் தந்துள்ளது பொது மக்களுக்கு நன்றாகப் புரிகிறது. இவ்வளவுக்குப் பிறகும் இதுகுறித்து விளக்கங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்களே, அதைப் பற்றி ஒருவர் (சரத்குமார்) அறிக்கை விடுத்துள்ளாரே?
பதில்: அரசின் விளக்கம் பொது மக்களுக்கும் புரிகிறது. கேபிள் டிவி நடத்துவோருக்கும் புரிகிறது. ஆனால் சிலருக்கு புரியவில்லை என்று அர்த்தமல்ல. அவர்கள் புரிந்தும் புரியாதது போலத் தான் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர். அது அவர்களது விருப்பம் கூட அல்ல தான். ஒரு சிலரின் வற்புறுத்தலின் காரணமாகத் தான் அந்த அறிக்கைகள் வெளிவருகின்றன என்பதை அறிந்து கொள்ளும் இடத்தில் தான் நான் இருக்கிறேன்.
அரசு கேபிள் கார்ப்பரேஷன் துவங்குவதால் பொது மக்களுக்கோ, கேபிள் நடத்துவோருக்கோ எவ்விதமான சங்கடமும் நேராமல் அரசு பார்த்துக் கொள்ளும்.
கேள்வி: மறைமுகமாக பேருந்து கட்டணங்கள் தமிழகத்தில் உயர்த்தப்பட்டு விட்டதாக தேமுதிக தலைவர் விடுத்த அறிக்கைக்கு விளக்கமாக அந்தத்துறையின் அமைச்சர் திமுக ஆட்சி கடந்த ஆண்டு தொடங்கிய பிறகு எந்தவிதமான கட்டண உயர்வும் செய்யப்படவில்லை என்று பதில் கொடுத்திருந்தார்.
அதற்கு மீண்டும் பதிலளிக்கும் வகையில் பயணிகளின் பிரச்சனை தீரவில்லை என்றும் கலர் கலராக பஸ்களை விட்டு கட்டண உயர்வு என்று கூறியதாகவும் அவர் சொல்லியிருக்கிறாரே?
பதில்: இந்தப் பிரச்சனை குறித்து அந்தத் துறையின் செயலாளர், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், அதிகாரிகள் மற்றும் அமைச்சரிடம் நான் நன்கு விசாரித்து விட்டேன். அதிமுக ஆட்சியிலே இருந்த பேருந்து கட்டணத்தை விட ஒரு பைசா கூட உயர்த்தப்பட வில்லை என்பது தான் உண்மை. தேர்தல் அறிக்கையில் கூறும்போது, அதிமுக ஆட்சியிலே உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைப்பதாக தெரிவித்தீர்களே ஏன் குறைக்கவில்லை என்று அவர் கேட்டிருக்கிறார்.
நாங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த பிறகு பெட்ரோல், டீசல் கட்டணங்கள் மத்திய அரசினால் உயர்த்தப்படாமல் இருந்திருந்தால், பேருந்து கட்டணத்தை ஓரளவிற்கு குறைத்திருக்க முடியும்.
ஆனால் மீண்டும் எரிபொருள்களின் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் பேருந்து கட்டணங்களை உயர்த்தாமல் கடந்த கால ஆட்சியில் வசூல் செய்யப்பட்ட கட்டணத்தை வசூலிப்பது என்று முடிவெடுத்திருக்கிறோம்.
பேருந்து கட்டணம் மறைமுகமாக வாங்கப்படுகிறது என்று முதலில் அறிக்கையிலே கூறப்பட்ட காரணத்தில் தான் போக்குவரத்து துறை அமைச்சர், மறைமுகமாக வாங்குபவர்கள என்று அவரது அறிக்கையிலே கூறியிருக்கிறார் போலும்.
என்னைப் பொறுத்தவரையில் அவர் அறிக்கையிலே தெரிவித்திருப்பதை போல அவர் உழைத்து சம்பாதித்து பழக்கப்பட்டவரை தவிர உழலிலே சம்பாதிப்பவரல்ல என்பதும் எதையும் மறைமுகமாக வாங்க வேண்டிய அவசியம் அவருக்கு கிடையாது என்பதையும் நான் அறிவேன்.
மேலும் அவரது அறிக்கையில் இறுதியில் நான் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது பஸ் கட்டணத்தை குறைத்ததாகவும் அதனை மக்கள் வரவேற்றனர் என்றும், இன்றைய போக்குவரத்துத் துறைத் அமைச்சர் அன்றைய போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் பாடம் பெறலாம் என்றும் எழுதியிருக்கிறார்.
என்னைப் பாராட்டியதற்காக நன்றி தெரிவிப்பதோடு, இன்றைய போக்குவரத்துத் துறை அமைச்சர் கூட இப்போதும் என் யோசனைகளைக் கேட்டுத்தான் நடந்து வருகிறார் என்பதையும் தெரிவித்து அரசின் நிதி நிலைமைக்கேற்ப பேருந்து கட்டணங்கள் உள்ளன என்பதையும் அவருக்கு விளக்கமாக அளிக்கின்றேன்.
கேள்வி: கட்டாய ஹெல்மெட் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதே?
பதில்: இதில் முடிவெடுப்பது அரசின் கையில் இல்லை. நீதிமன்றத் தீர்ப்பையும் அரசு மதிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications