ஆசிரியர்களின் பாலியல் தொல்லை: தப்பி ஓடிதோட்டத்தில் பதுங்கிய பிளஸ்டூ மாணவி
ஈரோடு:ஈரோடு மாவட்டம் நடுப்பாளையம் என்ற ஊரில், ஆசிரியர்களின் பாலியல் தொல்லையிலிருந்து தப்பித்து தலைமறைவாகி மரவள்ளிக் கிழங்கு தோட்டத்தில் 2 நாட்களாக பதுங்கியிருந்து உணவின்றி மயங்கிக் கிடந்த பிளஸ்டூ மாணவியை போலீஸார் மீட்டனர்.
நடுப்பாளையத்தில் சாமி மெட்ரிக் பள்ளிக் கூடம் உள்ளது. இங்கு பிளஸ்டூ படித்து வருபவர் ரேவதி. பள்ளி விடுதியில் தங்கி இவர் படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவர் காணாமல் போனார்.
இதையடுத்து போலீஸார் ரேவதியைத் தேடி வந்தனர். இந்த நிலையில், பள்ளிக்கூடத்திற்கு அருகே உள்ள ஒரு மரவள்ளிக் கிழங்கு தோட்டத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார் ரேவதி.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து ரேவதியை மீட்டனர். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தார் ரேவதி.
ரேவதி படித்து வரும் பள்ளியைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் ரேவதியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளனர். பின்னால் தட்டுவது, கன்னத்தைக் கிள்ளுவது, கையைப் பிடிப்பது என சில்மிஷம் செய்து வந்துள்ளனர்.
விடுதியில் தங்கிப் படித்து வருவதால் தனது கற்புக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என பயந்துள்ளார் ரேவதி. இதனால் பள்ளியிலிருந்து வெளியேறி அருகே உள்ள மரவள்ளிக் கிழங்கு தோட்டத்தில் போய் பதுங்கியுள்ளார்.
அங்கு சாப்பாடு கிடைக்காமல் மயங்கிய நிலையில் கிடந்தபோதுதான் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் தொடர்ந்து மாணவியிடம் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications