மதுரையைக் காலி செய்த சிவகாசி ஜெயலட்சுமி:சொந்த ஊரில் செட்டில்!
மதுரை:செலவுக்குப் பணம் இல்லாததாலும், வாடகை கொடுக்க முடியாததாலும், மதுரையில் தான் தங்கியிருந்த வீட்டைக் காலி செய்து விட்டு சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் காக்கிவாடன் பட்டிக்குப் போய் விட்டார் சிவகாசி ஜெயலட்சுமி.
ஏட்டு முதல் எஸ்.பி. வரை என்ற வார்த்தை கிட்டத்தட்ட சிவகாசி ஜெயலட்சுமியின் இனிஷியல் போல ஆகி விட்டது. அந்த அளவுக்கு தெற்கத்தி காவல்துறையை தனது முந்தானையில் முடிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சிவகாசி ஜெயலட்சுமி.
காவல்துறை மீது அவர் சுமத்திய புகார்கள் பின்னர் பூமராங் போல அவர் மீதே திரும்பின. டி.எஸ்.பி. மனைவி தற்கொலை செய்து கொண்ட, நகைக் கடை மோசடி உள்ளிட்ட பல்வேறு புகார்களில் சிக்கி அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன.
![]() |
இதில் சில வழக்குகளில் தண்டனை கிடைத்தது. சிலவற்றில் விடுதலை கிடைத்தது. இந்த நிலையில் அனைத்து வழக்குகளிலும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே இருக்கும் சிவகாசி ஜெயலட்சுமி, மதுரை எல்லீஸ் நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு வழக்குகளை சந்தித்து வந்தார்.
தான் குடியிருந்த வீட்டுக்கு பல மாதங்களாக ஜெயலட்சுமி வாடகை கட்டவில்லை. இதுதொடர்பாக வீட்டு உரிமையாளர் பலமுறை கேட்டும் வழக்குகள் முடிந்த பிறகு தருவதாக கூறி வந்தார் ஜெயலட்சுமி.
ஆனால் வாடகை வருவது போலவும் தெரியவில்லை, வழக்குகள் முடிவது போலவும் தெரியவில்லை என்பதால் வீட்டு உரிமையாளர் கோர்ட்டை அணுகியுள்ளார். ஜெயலட்சுமியை காலி செய்ய உத்தரவிடக் கோரி அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் ஜெயலட்சுமியே தனது வீட்டைக் காலி செய்து விட்டார். காரணம் சுத்தமாக அவரிடம் ஒரு பைசா கூட இல்லையாம். இதனால் செலவுக்குக் காசு இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார். மேலும் வாடகை கட்டாததால் அதற்கும் ஒரு வழக்கு என்று வந்து விட்டதால் போதுமடா சாமி என்ற முடிவுக்கு வந்த ஜெயலட்சுமி தனது சொந்த ஊருக்கேப் போய் விட முடிவு செய்தார்.
இதையடுத்து மதுரை வீட்டைக் காலி செய்த ஜெயலட்சுமி தனது சொந்த ஊரான காக்கிவாடன்பட்டிக்குப் போய் விட்டார். அங்குள்ள தனது உறவினர் வீட்டில் தற்போது தங்கியிருக்கிறாராம். வழக்கு விசாரணைகளுக்காக மட்டும் இனி மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு வந்து போவாராம்.
தன்னை ஒதுக்கி வைத்து விட்ட பெற்றோருடன் சமரசம் செய்து கொள்ள உறவினர்கள் மூலம் முயற்சித்து வருகிறாராம். ஜெயலட்சுமியின் பிள்ளைகள் அவ்வப்போது வந்து தங்களது தாயை சந்தித்துப் பேசி விட்டுச் செல்கிறார்களாம்.













Click it and Unblock the Notifications