காங்.-இடதுசாரிகள் தொடர்ந்து பிடிவாதம்:ஆட்சி கவிழுமா?-தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்
டெல்லி:அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடது சாரிகள் தங்களது நிலையிலிருந்து இறங்கி வருவதாக தெரியவில்லை. அதே போல விட்டுக் கொடுக்கும் திட்டத்தில் பிரதமரும் இல்லை.
இதனால் விரைவில் லோக்சபாவுக்கு இடைத் தேர்தல் வரலாம் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.
இந்தியா, அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒப்பந்தத்தை ஏற்கவே முடியாது என்று இடதுசாரிகள் கூறி வருகின்றன.
அமெரிக்காவா அல்லது நாங்களா, யார் வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் என பிரதமரிடம் இடதுசாரிகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டன.
ஒப்பந்த விஷயத்தில் இவ்வளவு தூரம் போய்விட்ட பிறகு திரும்பிப் போனால் சர்வதேச அளவில் தனது மரியாதை கேள்விக்குறியாகிவிடும் என பிரதமர் மன்மோகன் சிங் கருதுகிறார்.
இதனால் விட்டுத் தர அவர் தயாராக இல்லை. ஆட்சியை இழக்கவும் கூட அவர் தயாராகிவிட்டார்.
இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர சோனியா காந்தியின் யோசனைப்படி 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைப்பதாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அறிவித்தது. ஆனால் இந்தக் குழு என்ன செய்யப் போகிறது என்று கேள்வி கேட்டுள்ளனர் இடதுசாரிகள்.
அணு சக்தி ஒப்பந்தத்தை முதலில் நிறுத்தி வைக்க வேண்டும். அதில் அடுத்த கட்டமாக ஒரு அடி கூட எடுத்து வைக்கக் கூடாது. இதற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே ஆதரவு தொடரும் என இடதுசாரிகள் திட்டவட்டமாகக் கூறி விட்டன.
இதையடுத்து அரசு யோசித்து முடிவெடுக்க கொஞ்சம் கால அவகாசம் தர வேண்டும் என இடதுசாரிகளை கூட்டணியில் உள்ள திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் கோரி வருகின்றன.
இதனால் தான் ஆதரவு விஷயத்தில் இதுவரை எந்த இறுதி முடிவையும் இடதுசாரிகள் எடுக்கவில்லை.
இந்த கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க முயன்று வரும் பாஜகவோ, உடனடியாக ஆதரவை வாபஸ் பெறுமாறும், அரசுக்கு எதிராக தாங்கள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்குமாறும் இடதுசாரிகளிடம் கோரி வருகிறது.
ஆனால், ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் பெற்றாலும் அரசுக்கு எதிரான எந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் வெல்ல விட மாட்டோம், அதன் மூலம் பாஜக பலம் பெற அனுமதிக்க மாட்டோம் என இடதுசாரிகள் கூறிவிட்டன.
இப்படியாக பாஜகவின் தயவால் இடதுசாரிகளிடமிருந்து காங்கிரஸ் இப்போதைக்கு தப்பித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், அமெரிக்கா விஷயத்தில் பிரதமர் முரண்டு பிடித்தால், மைனாரிட்டி பலத்துடன் அரசை ஆட்சியில் தொடர விட்டு அதை எந்த முடிவும் எடுக்க விடாமல், கிட்டத்தட்ட செயல்படவே விடாமல் முடக்குவது என்ற திட்டத்தில் இடதுசாரிகள் உள்ளனர்.
இப்படிப்பட்ட நிலையில் மத்திய அரசால் ஒரு மசோதாவைக் கூட நிறைவேற்ற முடியாது. உப்புக்கு சப்பாணியாக ஆட்சியில் அமர்ந்திருக்க முடியும். அவ்வளவே.
அதை மன்மோகன் சிங் விரும்பவில்லை. காங்கிரசும் விரும்பவில்லை.
இதனால் விரைவிலேயே இடைத் தேர்தல் வரும் என்ற பேச்சுக்கள் எழுந்துவிட்டன.
ஒருவேளை இந்தப் பிரச்சினை சுமூகமாக முடிந்தாலும் கூட, இடதுசாரிகளை நம்பி ஆள விரும்பாத காங்கிரஸ் லோக்சபா தேர்தலை முன்கூட்டியே சந்திக்கும் என்றும் பேச்சு கிளம்பியுள்ளது.
அதே நேரத்தில், குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக லோக்சபாவுக்கு இடைத் தேர்தல் வருவதை காங்கிரஸும், இடதுசாரிகளும் விரும்பவில்லை எனத் தெரிகிறது.
தற்ேபாது ஏற்பட்டுள்ள பிரச்சனையில் சோனியா காந்தி காட்டி வரும் பெருத்த அமைதியும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் பிரதமர் பதவியிலிருந்து மன்மோகன் சிங்கை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்பதில் சோனியா காந்தி தெளிவாக உள்ளார். அதேசமயம் இடதுசாரிகளின் ஆதரவை இழக்கவும் அவர் விரும்பவில்லை.
அதேசமயம், இடைத் தேர்தல் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
இதற்கிடையே காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சரத் பவார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகுமாறு தங்களது நிர்வாகிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்க ஆரம்பித்துள்ளனர்.
மொத்தத்தில் இடைத் தேர்தலுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாகவே அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications