சபரிமலையில் பெண்களுக்கு தனி சீசன்: கேரளா திட்டம்
நாகர்கோவில்:சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களுக்காக தனி சீசனை உருவாக்கலாம் என்று கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் சுதாகரன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நகைத் தொழிலாளர் பாதுகாப்பு பேரவையின் மாநாடு நடைபெற்றது.
இதில் கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் சுதாகரன் கலந்து கொண்டு பேசியதாவது:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க அரசு தயாராக உள்ளது. அவர்களுக்கென்று தனி சீசனுக்குரிய காலத்தை தேர்வு செய்து அவர்களை சபரிமலை சன்னிதானத்திற்கு அனுப்பவும் தயார். அந்தக் காலத்தில் பூசாரி மற்றும் காவலாளிகளைத் தவிர மற்ற அனைவருமே பெண்களாக இருப்பார்கள்.
ஆனால் இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. கேரள அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதுதான் கேரள அரசின் நிலை.
அதேசமயம், உச்சநீதிமன்றம் உத்தரவிடாவிட்டால் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பம்பையுடன் தடுத்து நிறுத்தப்படுவர்.
கடந்த ஆண்டில் மட்டும் 4.5 கோடி பேர் சபரிமலை வந்து சென்றனர். அதன் மூலம் ரூ.101 கோடி வருமானம் கிடைத்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications