சாதனை படைக்கும் மேட்டூர்:3வது முறையாக அணை நிரம்பியது
மேட்டூர்:கர்நாடகா மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து அணை மீண்டும் நிரம்பியுள்ளது.
இந்த ஆண்டில் அணை நிரம்புவது இது 3வது முறையாகும்.
![]() |
மேட்டூர் அணையிலிருந்து வருடந்தோறும் ஜூன் 12ம் தேதி காவிரி பாசனத்திற்கு நீர் திறந்து விடப்படும். ஆனால் இந்த ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் பருவ மழை தாமதமாக பெய்யத் தொடங்கியதால் ஜூலை 18ம் தேதி தான் மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து அணை திறந்து விடப்பட்டது.
பின்னர் தண்ணீரின் வரத்து குறைந்து அணையின் நீர்மட்டமும் குறைந்தது.
இதையடுத்து ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலிருந்து அணைக்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரித்தது. கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி மேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பை கருதி 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் காவிரி கரையோர மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் மழை நின்றதால் அணையின் நீர்மட்டம் 117 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் வரத்தும் வெகுவாக குறைந்திருந்தது.
இப்போது மீண்டும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து மேலும் அதிகரிக்க ஆரம்பித்தது.
இந் நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதன் மூலம் 3வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 2 முறை நிரம்பியுள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரத்தின்படி அணைக்கு வினடிக்கு 32,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக உள்ளது. வினாடிக்கு 21,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை மீண்டும் நிரமபியுள்ளதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications