தினகரன் பதவி காலி-பொருளாளர் ஆனார் ஓ.பி
சென்னை:அதிமுக பொருளாளராக முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பொறுப்பில் இருந்து வந்து டி.டி.வி.தினகரன் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக முன்னாள் அமைச்சர் தம்பித்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.
![]() |
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீரென கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இக் கூட்டத்திற்கு பொருளாளரும் ராஜ்யசபா எம்பியுமான தினகரன் அழைக்கப்படவில்லை. அவரை சமீபகாலமாக ஒதுக்கி வரும் ஜெயலலிதா, தற்போது அவரிடம் இருக்கும் பொருளாளர் பதவியை பறித்துள்ளார்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சிறுதாவூர் பங்களாவில் தங்கியிருந்த ஜெயலலிதா நேற்று மாலை போயஸ் கார்டன் திரும்பினார். இதையடுத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுடன் சுமார் 2 மணி நேரம் ஜெயலலிதா தீவிர ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் இன்று ஜெயலலிதா விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரை மாற்றி அறிவித்துள்ளார்.
அதன்படி கட்சியின் புதிய பொருளாளராக ஓ.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை வகித்து வந்த தேர்தல் பிரிவு செயலாளர் பதவி பொள்ளாச்சி ஜெயராமனுக்குப் போகிறது.
![]() |
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக முன்னாள் அமைச்சர் தம்பித்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறுபான்மையினர் பிரிவு செயலாளராக இருந்த பி.எச்.பாண்டியன், அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மீனவர் அணிச் செயலாளராக கே.கே.கலைமணி நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளராக சிவபதியும், சிறுபான்மையினர் நலப் பிரிவு தலைவராக ஜஸ்டின் செல்வராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும் பதவியில் இருந்து வந்து அவைத் தலைவர் மதுசூதனன், இனி அவைத் தலைவர் பதவியில் மட்டும் நீடிப்பார்.
இதுதவிர வேறு சில மாற்றங்களையும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதன்படி கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக எம்.சி.சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதுவரை வகித்து வந்த எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் வேலு மணியும், சேலம் மாநகர மாவட்ட செயலாளராக செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
174 அதிமுகவினருக்கு இலவச வீட்டு மனை:
அதிமுக நடத்திய போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்ற தொண்டர்கள் 174 பேருக்கு இலவச வீட்டு மனைகளுக்கான பட்டாவை ஜெயலலிதா வழங்கினார்.
அருப்புக்கோட்டை 20வது வார்டு கவுன்சிலர் சிவசங்கரன் இந்த நிலங்களை இலவசமாக வழங்கியுள்ளார். அவர் கொடுத்த 12 ஏக்கர் நிலத்தைப் பிரித்து 174 பேருக்கு ஜெயலலிதா வழங்கினார்.
அதிமுக தலைமைக் கழகத்தில் நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் ராஜபாளையம் பெண் எம்.எல்.ஏ. சந்திராவுக்கும் ஒரு வீட்டு மனை கிடைத்தது. அதே போல மாவட்டச் செயலாளர் சிவசாமிக்கும் நிலத்தை ஜெயலலிதா வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட பாஜகவைச் சேர்ந்த 150 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 250 திமுகவினரும் அதிமுகவில் இணையும் வைபமும் நடந்தது.
இந்த வைபவத்துக்கான ஏற்பாடுகளை மாஜி மந்திரிகள் தளவாய் சுந்தரம், தம்பிதுரை ஆகியோர் செய்திருந்தனர்.














Click it and Unblock the Notifications