நல்ல திட்டங்களை நிறைவேற்றி வரும்கருணாநிதி- ராதிகா செல்வி பெருமிதம்
தூத்துக்குடி:முதல்வர் கருணாநிதி தமிழகத்திற்குத் தேவையான பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் என்று மத்திய இணை அமைச்சர் ராதிகா செல்வி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் தமிழக அரசின் இலவச தொலைக்காட்சி பெட்டி வழங்கும் விழாவில் மத்திய இணை அமைச்சர் ராதிகா செல்வி கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் இலவச கலர் டிவி திட்டம், 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி திட்டம், திருமண உதவித்தொகை, முதியோர், ஊனமுற்றோர் உதவித் தொகை, கர்ப்பிணி பெண்கள் பிரவச உதவித் தொகை, வரும்முன் காப்போம் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றி ஏழை, எளிய மக்களின் வாழ்வை வளப்படுத்துகிறார்.
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் வழங்கி கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு செல்ல இலவச சேவை திட்டத்தையும் கொண்டு வந்துள்ளார் முதல்வர் கருணாநிதி. மக்களுக்காகவே இந்த அரசுகள் செயல்படுகின்றன என்றார் அவர்.