வைகுண்டராஜன், தம்பிகளுக்கு முன் ஜாமீன்!!
மதுரை:ஜெயா டிவியின் பங்குதாரர் வைகுண்டராஜன் உள்ளிட்ட 3 பேர் மீது அணு சக்தி சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
![]() |
தூத்துக்குடி மாவட்டம், கீரைக்காரன்தட்டையைச் சேர்ந்த வி.வி.மினரல்ஸின் உரிமையாளர் வைகுண்டராஜன். இவர் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரையில் அனுமதியில்லாமல் மணலை அள்ளி அதிலிருந்து அணு சக்திக்கான தாதுவைப் பிரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தார்.
இதில் அரசிடம் கணக்கில் காட்டாமல் முறைகேடாக அள்ளிய மணலும் அடக்கம். கடந்த அதிமுக ஆட்சியில் செல்வாக்கோடு இந்த தொழிலை செய்து வந்த வைகுண்டராஜனுக்கு, திமுக ஆட்சி வந்தவுடன் கடும் சோதனை ஏற்பட்டது.
இவர் மீது, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரையில் அரசின் அனுமதியில்லாமல் தாது மணலை எடுத்து பிரித்து விற்றதாக மாநில கனிம வளத்துறை துணை இயக்குநர் குமரி மாவட்ட மத்திய குற்றப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் அணு சக்தி சட்டத்தின் கீழ் வைகுண்டராஜன், அவரது சகோதரர்கள் ஜெகதீசன் மற்றும் சந்திரேசன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவரது நிறுவனங்களில் சோதனை நடத்தியதுடன், அவரை பிடித்து விசாரிக்கவும் முடிவு செய்தது.
இதையடுத்து தனது 2 தம்பிகளுடன் தலைமறைவானார் வைகுண்டம்.
முன் ஜாமீன் கோரி இவர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி ராஜசூர்யா, 3 பேருக்கும் முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.
மேலும் தன் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வைகுண்டராஜன் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவையும் விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, அதை நான்கு வாரங்களுக்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.













Click it and Unblock the Notifications