விவசாயிகளுக்கு அரசு கொடுத்த செக் ரிட்டர்ன்!
நாக்பூர்:செக் மோசடி செய்பவர்களை உள்ளே தள்ள வழி உள்ளது. ஆனால் அரசாங்கமே செக் ரிட்டர்ன் செய்தால் என்ன செய்வது? மகாராஷ்டிர மாநிலத்தில்தான் அந்தக் கூத்து நடந்தேறியுள்ளது!
மகாராஷ்டிர மாநிலம் வாசிம் மாவட்டத்தில் உள்ள 2 விவசாயிகளுக்கு மாநில அரசு கொடுத்த 2 காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி விட்டனவாம்.
விதர்பா மண்டலத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து மாணிக் லசன்குட்டே என்ற விவசாயிக்கு ரூ. 15 ஆயிரம் நிதியும், ஹிவாரா கிராமத்தைச் சேர்ந்த பானுராவ் இங்கோல் என்பவருக்கு ரூ. 350க்கான காசோலைகளும் தரப்பட்டுள்ளன.
விவசாயிகள் அந்த செக்கை எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்றுள்ளனர். வங்கியில் செக்கைப் போட்டுல்ளனர். ஆனால் பணம் இல்லை என்று கூறி செக் திரும்பி விட்டதாம்.
அதிர்ச்சி அடைந்த அந்த அப்பாவி விவசாயிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் கர்வாண்டேவிடம் சென்று நடந்ததைக் கூறியுள்ளனர். இந்த குழப்பம் குறித்து கர்வாண்டே கூறுகையில், அரசாங்கம் நிவாரண உதவி வழங்குவது தொடர்பாக காசோலைகளை விநியோகித்து விட்டது.
ஆனால் அதற்கான பணத்தை வங்கியில் போடவில்லை. இதனால்தான் இந்தக் குழப்பம் நேர்ந்து விட்டது. இரண்டு விவசாயிகளுக்கும் பணத்தை கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழப்பத்திற்குக் காரணமான விவசாயத்துறை அதிகாரி கண்டர்கருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
நல்ல வேளை இரு விவசாயிகளும் கேஸ் போடாமல் கலெக்டரைப் போய்ப் பார்த்ததால் அரசு தப்பியது!












Click it and Unblock the Notifications