போராட்டம் வேண்டாம்- மருத்துவ மாணவர்களை பேச்சுக்கு அழைக்கும் அன்புமணி
சென்னை:
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கிராமப் புறங்களில் பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவு குறித்து மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பிரதிநிதிகளோடு பேச தயாராக இருப்பதாகவும், இதால் போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அரசு, தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தை கடந்த 2005ல் தொடங்கி செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற மருத்துவச் சேவையை வலுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடம் இருந்து அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன.
இதுகுறித்து நிபுணர்குழு வைத்து ஆய்வு செய்ததில் குறைந்தபட்சம் ஓராண்டு கிராமத்தில் கட்டாயமாக மருத்துவச் சேவை செய்யவேண்டும் என்றும், அதன் பிறகே நிரந்தர மருத்துவப்பதிவு சான்றிதழ் தர வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.
அதனடிப்படையில்தான் ஓராண்டு கிராம சேவை கட்டாய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த ஓராண்டு சேவையில், மருத்துவ மாணவர்கள் பொது சுகாதாரம், கிராம மக்களின் சமூக பொருளாதார நிலைகள் ஆகியவற்றை நன்கு புரிந்து கொண்டு, நல்ல அனுபவமும் பெற்று சிறப்புடன் பணியாற்ற வகை செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களிடம் நல்ல பெயரும்,பாராட்டும் கிடைக்கும்.
கிராம மக்களின் மருத்துவ தேவைகளையும் நாம் பூர்த்தி செய்ய வேண்டும். எனவே, கிராமப்பகுதிகளிலும், சிறு நகரங்களிலும் பணியாற்ற டாக்டர்கள் முன்வர வேண்டும். எனவே, மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். இந்த பிரச்சனை குறித்து நான் டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களின் பிரதிநிதிகளுடன் பேசவிருக்கின்றேன் என்று கூறியுள்ளார் அன்புமணி.












Click it and Unblock the Notifications