நன்னடத்தை ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க முடிவு?
நெல்லை:
தமிழகத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளில் நன்னடத்தை சான்றிதழ்களுடன் உள்ள கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
சென்னை, மதுரை, பாளையங்கோட்டை, வேலூர், கோவை உள்பட தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளிலும் மொத்தம் 3,500 ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளனர்.
இவர்களில் நன்னடத்தை அடிப்படையில் ஆண்டுதோறும் அண்ணா பிறந்த நாளன்று கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் இது அமல்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் நன்னடத்தையுடன் கூடிய கைதிகளை விடுதலை செய்ய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து தமிழகத்திலுள்ள 9 மத்திய சிறைகளுக்கும் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு ஒரு உத்தரவை அனுப்பியுள்ளது.
அதில் வரும் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று ஆயுள் தண்டனை கைதிகளில் 10 ஆண்டுகள் பூர்த்தி செய்த நன்னடத்தை கைதிகளை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அவர்களின் பட்டியலை அனுப்பி வைக்குமாறு கூறியது.
இதன் பேரில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளில் 10 ஆண்டுகள் பூர்த்தி செய்த நன்னடத்தை கைதிகள் 52 பேரின் பெயர் மற்றும் அவர்களின் விவரங்கள் சென்னை சிறைத்துறை கூடுதல் டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த உத்தரவால் நன்னடத்தை கைதிகள் 375 பேர் விடுதலையாகக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications