லஞ்சம் வாங்கிய சார் பதிவாளருக்கு 3 ஆண்டு சிறை!
திருநெல்வேலி:
லஞ்சம் வாங்கிய சார் பதிவாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாளையங்கோட்டையை சேர்ந்தவர் சகுர்பர்த்தின். இவர் மாவட்ட பத்திர பதிவாளர் அலுவலகத்தில் இணை சார்பதிவாளராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 1999ம் ஆண்டு மேலப்பாளையத்தை சேர்ந்த ஜோசப்ராஜன், தான் வாங்கிய நிலத்தை பத்திரம் பதிவு செய்வதற்காக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடைய நிலத்தை பதிவு செய்து கொடுப்பதற்கு ரூ.650 லஞ்சமாக சகுர்பத்தின் கேட்டார்.
இதுகுறித்து ஜோசப்ராஜன் அப்போதைய நெல்லை மாவட்ட லஞ்ச ஓழிப்பு டி.எஸ்.பி பெருமாள்சாமியிடம் புகார் செய்தார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்பாட்டின்படி ரசாயன பவுடர் பூசப்பட்ட பணத்தை லஞ்சமாக சகுர்பத்திடம் ஜோசப்ராஜன் கொடுத்தார்.
அப்போது மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் மறைந்திருந்த டி.எஸ்.பி பெருமாள்சாமி தலைமையிலான போலீசார் சகுர்பத்தினை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான வழக்கை அப்போதைய நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி மலுக்குமுதலி விசாரித்து வந்தார்.
இவ்வழக்கின் இறுதி விசாரணை நெல்லை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று (04-09-2007) நடந்தது. வழக்கை விசாரித்த நெல்லை தலைமை குற்றவியல் நீதிபதி மாயாண்டி சகுர்பத்தினுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டணையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications