விரைவில் கோட்டையில் நம் தீபம் ஒளிவீசும்-விஜய்காந்த்
சென்னை:
புதுக்கோட்டை தேமுதிக மாநாட்டில் நாம் ஏற்றப் போகும் நம் தீபம் விரைவில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுடர் விட்டு ஒளி வீசுகின்ற நாளுக்கு அச்சாரமாக அமையும்
என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதலில் ரசிகர் நற்பணி மன்றமாக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தமிழகம் முழுவதும் விதையாக பரவி, செடியாக மாறி, மரமாக வளர்ந்தது. இந்த ரசிகர் நற்பணி மன்றங்கள் தொண்டர்கள் விருப்பத்திற்கு இணங்க தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியாக உருவாக்கப்பட்டு இன்று ஆலமரம் போல் தழைத் தோங்கி, அருகுபோல் வேறூன்றி வளர்ந்து வருகிறது.
இந்த வேளையில் கடந்து வந்த பாதையில் எத்தனையோ தடைக்கற்கள், முட்கள், காயங்கள், வலிகள், தோல்விகள், சோதனைகள் என்று வந்த போதெல்லாம் தொண்டர்கள் உறுதியே பல வெற்றிகளை பெற காரணமாக இருந்தது.
நான் உழைத்து சம்பாதித்த எத்தனையோ கோடிகளை இழந்தாலும், கோடிக்கணக்கான இதயங்களை நான் இழக்கவில்லை. அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவின்படி இன்று தமிழகமே நம் கட்சியைப் பார்த்து வியக்கும் வண்ணம் வெற்றியோடு கட்சியை உங்கள் ஆதரவுடன் என்னால் நடத்தி செல்ல முடிகிறது.
இன்றைக்கு தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு எந்த கூட்டணிக்கும் அடிபணியாமலும், தமிழக மக்களின் நெஞ்சங்களில் நம்பிக்கை நட்சத்திரங்களாகவும், சுய கவுரவத்துடனும் மரியாதையோடும் இடம் பிடித்து கொண்டிருக்கிறோம்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்க மதுரையில் நடைபெற்ற மாநாட்டை தமிழகமே திரும்பி பார்க்கும் வண்ணம் வெற்றி மாநாடாக அமைத்து தர வேண்டுமென்று தொண்டர்களுக்கு அன்புக் கட்டளையிட்டேன். ஆனால் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு மாபெரும் வெற்றி மாநாடாக நடத்தி புதிய வரலாறு படைத்தார்கள். கட்சி ஆரம்பித்து இரண்டு வருடங்கள் மட்டுமே முடிந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.
மூன்றாம் ஆண்டு தொடக்க விழா செப்டம்பர் 14ம் நாள் புதுக்கோட்டையில் நடைபெறவுள்ளது. இந்தப் பொதுக்கூட்டம் நம் முதல் மாநாட்டைக் காட்டிலும் பல மடங்கு சிறப்பு வாய்ந்த மாபெரும் பொதுக்கூட்டம் நம் முதல் மாநாட்டைக் காட்டிலும் பல மடங்கு சிறப்பு வாய்ந்த மாபெரும் பொதுக் கூட்டமாக மாற்றிக் காட்ட வேண்டிய மாபெரும் பொறுப்பை தொண்டர்கள் ஒவ்வொருவரிடமும் நான் ஒப்படைக்கிறேன்.
'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்ற பழமொழிக்கு ஏற்ப என் தளபதிகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மாபெரும் பொதுக்கூட்டத்தில் நாம் புதுக்கோட்டையில் ஏற்றப் போகும் நம் தீபம் விரைவில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுடர் விட்டு ஒளி வீசுகின்ற நாளுக்கு அச்சாரமாக அமைய வேண்டுமென்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.
எத்தனை கட்சிகள் இருந்தாலும் நம் தமிழக மக்களின் வாழ்வில் ஒளியேற்ற நம்மை விட்டால் வேறு கட்சிகள் கிடையாது.
நேற்று ஆண்ட கட்சிக்கும், இன்று ஆளும் கட்சிக்கும் மாற்றுக் கட்சியாக நம் தேமுதிக மலர்ந்துள்ளது. நம் தொண்டர்களோடு, ஒன்று சேர்ந்து ஊழலையும், வறுமையையும் ஒழித்து தமிழ்நாட்டில் நல்லாட்சி அமைய உறுதி ஏற்போம். வெற்றி பெறுவோம். புதுக்கோட்டை மாபெரும் பொதுக்கூட்டம் வரலாற்று சிறப்புடன் அமைய அலைகடலென திரண்டு வாரீர் என்று விஜயகாந்த் அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications