நக்சலைட் தாக்குதலில் முன்னாள் முதல்வர்,br/அமைச்சர் தப்பினர் - 3 பேர் பலி
நெல்லூர்:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் முன்னாள் முதல்வர் ஜனார்த்தன ரெட்டி, அவரது மனைவியும், அமைச்சருமான ராஜலட்சுமி ஆகியோர் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தில் 3 காங்கிரஸ் கட்சியினர் பலியாயினர்.

ஜனார்த்தன ரெட்டி தற்போது எம்.பியாக உள்ளார். இன்று காலை தனது மனைவி ராஜலட்சுமியுடன் திருப்பதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார் ஜனார்த்தன ரெட்டி.
கார் நெல்லூர் மாவட்டம் சித்தவேடு கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த கால்வாய் பாலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க வைக்கப்பட்டது.
இதில் கார் பலத்த சேதமடைந்தது. ஜனார்த்தன ரெட்டி, ராஜலட்சுமி இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால் அவர்களுடன் பயணித்த காங்கிரஸ் கட்சியினர் 3 பேர் கண்ணிவெடியில் சிக்கி இறந்து விட்டனர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார், ஜனார்த்தன ரெட்டியையும், அவரது மனைவியையும் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டாம் எனவும், மேலும் பல கண்ணிவெடிகள் ஆங்காங்கு புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் எச்சரித்தனர். இதையடுத்து ரெட்டி தனது திருப்பதி பயணித்தை ரத்து செய்து விட்டு நெல்லூர் திரும்பினர்.
ரெட்டிக்கு இன்று திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காகத்தான் ரெட்டி திருப்பதி சென்று கொண்டிருந்தார்.
அவரது காருடன் 21 வாகனங்களில் காங்கிரஸ் கட்சியினரும் வந்தனர். கண்ணி வெடித்த அதிர்ச்சியில் ஒரு கார் சுக்கு நூறாக சிதறிப் போனதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் திகிலுடன் கூறினர். எனவே மிகவும் பலம் வாய்ந்த வெடிகுண்டை நக்சலைட்டுகள் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் நாகார்ஜுன ரெட்டி, பேஷய்யா மற்றும் பாபு என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications