நெஞ்சு வலியுடன் பஸ்சை ஓட்டிbr/60 பயணிகளைக் காத்த டிரைவர்!
புதுச்சேரி:
ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், அதைப் பொறுத்துக் கொண்டு பேருந்தில் இருந்த 60 பயணிகளின் நலனை மனதில் கொண்டு பத்திரமாக பேருந்தை ஓட்டி வந்து பேருந்து நிலையத்தில் நிறுத்தினார் அரசுப் பேருந்து ஓட்டுநர். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதுச்சேரி கிளையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர் பத்மநாபன். 45 வயதாகும் இவர் திருச்சிற்றம்பலத்தில் வசித்து வருகிறார்.
நேற்று இவர் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு பேருந்தை ஓட்டிச் சென்றார். பேருந்தில் 60 பேர் இருந்தனர். புதுச்சேரி பேருந்து நிலையத்தை நெருங்கிய நிலையில் திடீரென பத்மநாபனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் துடித்தார்.
இருந்தாலும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வலியைப் பொறுத்தபடி, மிகவும் மெதுவாக பேருந்தை ஓட்டியபடி பேருந்து நிலையத்திற்குள் கொண்டு வந்து பேருந்தை நிறுத்தினார். பின்னர் மயங்கி ஸ்டியரிங்கில் சரிந்தார்.
பதறிப் போன பயணிகள் ஓட்டுநரை மெதுவாகத் தூக்கி இருக்கையில் கிடத்தினர். பின்னர் பாண்டுரங்கன் என்ற ஓட்டுநர் விரைந்து வந்து பேருந்தை அரசு மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications