தேமுதிகவில் 'மா போ' பாண்டியராஜன்!
சென்னை:
சென்னையைச் சேர்ந்த பிரபல மனித வள ஆலோசகர் மாபோ பாண்டியராஜன், தேமுதிகவில் இணைந்துள்ளார்.
தேமுதிகவில் மீண்டும் பிரபலங்கள் இணையத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில், தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமியின் மகன் ராஜா தேமுதிகவில் இணைந்தார். இதையடுத்து நேற்று ஆயிரக்கணக்கான பேருடன் மாபோ பாண்டியராஜன் கட்சியில் இணைந்துள்ளார்.
சென்னையில் மனித வள ஆலோசனை அமைப்பை நடத்தி வரும் மா போ பாண்டியராஜன், பாஜக வர்த்தகப் பிரிவு தலைவராக இருந்து வந்தார். பின்னர் அந்தப் பதவியிலிருந்து சமீபத்தில் அவர் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் நேற்று விஜயகாந்த் முன்னிலையில் அவர் தேமுதிகவில் இணைந்தார். அவருடன் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பல்வேறு சுய தொழில் புரிவோரும் தேமுதிகவில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேசுகையில், திமுகவும், அதிமுகவும் எங்களைப் பார்த்து பயந்து போயிருக்கின்றன. கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகள் ஆகும் நிலையில் 20 சதவீத வளர்ச்சியை நாங்கள் கண்டுள்ளோம். அனைத்துத் தரப்பையும் சேர்ந்தவர்கள் எங்களது கட்சியில் சேர்ந்து வருகின்றனர்.
தற்போதைய அரசு ஊழல், வறுமையை ஒழிக்க முயற்சி எடுக்காமல், 2 ரூபாய்க்கு அரசி, இலவச கலர் டிவி என கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் ஏழ்மை ஒழியாது, ஊழல் அழியாது.
உண்மையில் கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியில்தான் ஊழல் இரண்டு மடங்காக மலிந்துள்ளது. மாநில வளர்ச்சிக்கென எந்தத் திட்டமும் இல்லை.
தேமுதிக ஒருபோதும் திமுக அல்லது அதிமுகவுடன் கை கோர்க்காது. இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றான கட்சியாகத்தான் நாங்கள் உருவெடுத்துள்ளோம் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications