கலாமை சந்தித்தார் சரத்குமார்
டெல்லி:
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்துப் பேசியுள்ளார் நடிகர் சரத்குமார்.
விஜயகாந்த் பாணியில் சமீபத்தில் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார் சரத்குமார். அவரது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அப்துல் கலாமின் கனவையே லட்சியமாகக் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று டெல்லியில் அப்துல் கலாமை சரத்குமார் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்துல் கலாம் அவர்களை சந்திக்க வேண்டும், எனது சிந்தனைகளை அவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நீண்ட நாள் கனவாக இருந்தது. இப்போதுதான் அது நிறைவேறியுள்ளது. இது எனது வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான தினம்.
நமது கிராமங்களை நாம் இன்னும் சரியாக பராமரிக்கவில்லை, தீவிர அக்கறை செலுத்தவில்லை, புறக்கணித்து வருகிறோம். கிராமங்களுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. பல்வேறு கிராமங்கள் அடிப்படை வசதி கூட இல்லாமல் உள்ளன.
இதுபோன்ற வறுமையில் உழலும், கவனிப்பாரின்றி இருக்கும் கிராமங்களில் டாக்டர்கள் சேவை செய்வது அவசியமாகும். அதற்காக அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. மாறாக பணி புரியுமாறு ஊக்கப்படுத்த வேண்டும்.
மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலைப் பயன்படுத்த வேண்டும். மாறாக நம்மை உயர்த்திக் கொள்ள அரசியலை கருவியாக பயன்படுத்தக் கூடாது.
நதி நீர் இணைப்பு குறித்து கடந்த பல வருடங்களாக பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை என்றார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications