வேலை கிடைக்காத விரக்தியில்br/சாந்தி தற்கொலைக்கு முயற்சி!
புதுக்கோட்டை:
வேலை கிடைக்காத விரக்தியிலும், தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் தன்னை தொடர்ந்து புறக்கணித்து வந்ததாலும் மனம் உடைந்தே தடகள வீராங்கனை சாந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்றவர் சாந்தி. புதுக்கோட்டை மாவட்டம் தட்டக்குறிச்சி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி.
பெரும் வறுமையில் உழன்று வரும் குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி, அந்த சிரமத்திற்கு இடையிலும், தன்னால் முடிந்த அளவுக்கு பயிற்சி எடுத்து தோகா போட்டியில் கலந்து கொண்டு ஓடி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்தார்.
அந்த சாதனையை அங்கீகரித்த தமிழக முதல்வர் கருணாநிதி ரூ. 15 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சாந்தி வீட்டினருக்காக ரூ. 1 லட்சம் மதிப்புள்ள எல்.சி.டி. டிவி ஆகியவற்றைப் பரிசாக அளித்தார்.
சாந்தி பாலின சர்ச்சையில் சிக்கியபோதிலும் கூட, அவரது திறமையை அங்கீகரித்து தமிழக அரசு இந்தப் பரிசினை வழங்கியது.
அதன் பின்னர் சாந்தி குறித்த எந்தத் தகவலும் இல்லாமல் இருந்தது. ஆனால் சமீபத்தில் அவர் தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கு என்ன காரணம் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. பாலினச் சர்ச்சையில் சிக்கிய பிறகு தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாந்தியை புறக்கணித்து வந்ததாம். அவரை எந்த நிகழ்ச்சிக்கும் கூப்பிடுவதில்லையாம். இது சாந்திக்கு பெரும் மன உளைச்சலைக் கொடுத்துள்ளது.
மேலும் புதுக்கோட்டை ஸ்டேடியத்தில் தடகளப் பயிற்சியாளர் பணியை வாங்க சாந்தி கடுமையாக முயன்று வந்துள்ளார். ஆனால் அவருக்கு அது கிடைக்கவில்லை. தடகளத் துறையைச் சேர்ந்தவர்களும் கூட சாந்திக்கு இந்த விஷயத்தில் உதவ முன்வரவில்லையாம்.
இப்படி அடுத்தடுத்து மன உளைச்சல் ஏற்பட்டதாலும், வேலையும் கிடைக்கவில்லை, மற்றவர்களும் புறக்கணிக்கிறார்கள் என்ற வருத்தத்திலும்தான் சாந்தி தற்கொலை முடிவுக்கு வந்தார் என்று கூறப்படுகிறது.
சாந்திக்கு அரசு வேலை வாய்ப்பை வழங்க முன்வர வேண்டும். இதன் மூலம் அவரது மனதில் ஏற்பட்டுள்ள விரக்தியை விரட்டியடித்து, அவரும் புத்துணர்ச்சியுடன் தனது வாழ்க்கையைத் தொடர முடியும் என்று சாந்தியின் உறவினர்களும், அவரது கிராமத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications