பல ஏக்கர் வனத்துறை நிலம் 'ஸ்வாஹா'; கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
திருச்சி:
திருச்சி மாவட்டத்ம் உறையூரில் வனத் துறைக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலத்தை விற்று மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், திருச்சி மாவட்டம் உறையூர் தாலுகாவில் பொன்னுசங்கம் பட்டியில் வன இலாகாவுக்கு சொந்தமாக சுமார் 300 ஏக்கர் நிலம் உள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் ஹவுராவைச் சேர்ந்த அருண் என்பவர் அதில் 200 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார்.
நிலம் வாங்கியதற்கான பத்திரங்களை சரிபார்த்ததில், அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என தெரிய வந்தது.
அரசை ஏமாற்றி வன இலாகா சொத்தை அபகரித்த அருண், திருச்சி மாவட்ட வன சரக அலுவலர், வன இலாகா அரசு செயலாளர், துறையூர் பத்திர பதிவாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்ற பெஞ்ச், 2 வாரத்திற்குள் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட்டது.