என்னையும், திருமா.வையும் பிரிக்க முடியாது-ராமதாஸ்
திண்டிவனம்:
நானும் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவனும் சேர்ந்து உயர்த்திய கைககள் ஒருபோதும் தாழாது, பிரியாது, மேலும் மேலும் உயரும். எங்களை யாராலும் பிரிக்க முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனத்தில், தைலாபுரத்தில் உள்ள ராமதாஸின் பண்ணை இல்லத்தில், அம்பேத்கர், காரல்மார்க்ஸ், பெரியார் ஆகியோரின் சிலைகள் திறப்புவிழா நேற்று நடந்தது.
இதில் விடுதலை சிறுத்தை பொதுச் செயலாளர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராசா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் ராமதாஸ் பேசுகையில், திண்டிவனத்தில் தந்தை பெரியாருக்கு சிலை கிடையாது. அதேபோன்று டாக்டர் அம்பேத்கர், காரல் மார்க்ஸ் போன்ற தலைவர்களுக்கு சிலைகள் இல்லை.
எனவே தான் மூன்று தலைவர்களுக்கும் தைலாபுரம் தோட்டத்திலேயே சிலைகள் அமைக்க முடிவு செய்தேன். தைலாபுரம் தோட்டத்துக்கு திருமாவளவன் வர விரும்பினாலும் அதற்கான வாய்ப்பும், சிலை திறப்பு விழாவின் மூலமாக அமைந்துள்ளதை பெருமையோடு கருதுகிறேன்.
தமிழை பாதுகாக்க வேண்டும் என்று தொடங்கிய கூட்டத்தில் நாங்கள் இருவரும் 2 கைகளையும் உயர்த்திய போது நான் கூறினேன். இணைந்த கைகள் பிரியாது. யாராலும் பிரிக்க முடியாது. பிரித்து பார்க்க நினைத்தாலும் நடக்காது. இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
குடிதாங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியை வைத்து திருமாவளவன் என்னை தமிழ் குடிதாங்கி என்று கூறுகிறார். தமிழை தாங்கி பிடிக்க வேண்டுமென்றால் நாம் இருவரும் சேர்ந்து தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த மக்களுக்கு விடுதலை கிடைக்காது என்பதை இருவரும் புரிந்து வைத்துள்ளோம்.
பல தலைவர்களை பஞ்சு மிட்டாய் தலைவர்கள் என்று கூறியுள்ளேன். இது போன்ற தலைவர்கள் பல சமுதாயத்திலும் உண்டு. ஆனால் கொள்கை அடிப்படையில் செயல்படும் திருமாவளவனை இனங்கண்டு வடபகுதியில் வந்து உங்கள் இயக்கத்தை பலப்படுத்துங்கள் என்று கூறினேன்.
மீண்டும் நாம் ஒன்றுபட்டுள்ளோம். இந்த உயர்த்தி பிடித்த கைகள் மென்மேலும் உயரும். இதை யாராலும் பிரிக்க முடியாது என்று ராமதாஸ் கூறினார்.