பஸ் தொழிலாளர்கள் - வக்கீல்கள் மோதல் கோர்ட் புறக்கணிப்பு; கடலூரில் பரபரப்பு!
கடலூர்:
கடலூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும், வக்கீல்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது. வக்கீல்களைக் கண்டித்து பஸ்களை சாலையில் நிறுத்தி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். பதிலடியாக காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பை வக்கீல்கள் அறிவித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
கடலூரில் நேற்று மாலை அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும், வக்கீல்களுக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது. இதையடுத்து அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நகர் முழுவதும் பேருந்துகளை நடுச்சாலைகளில் நிறுத்தி வைத்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் பேருந்துகள் ஓடவில்லை. பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
மேலும் சாலை மறியல் போராட்டத்திலும் ஊழியர்கள் குதித்தனர். இதையடுத்து கோட்டாட்சியர் பிருந்தா தேவி, எம்எல்ஏ அய்யப்பன் ஆகியோர் விரைந்து வந்து போக்குவரத்துக் கழக ஊழியர்களுடன் பேச்சு நடத்தினர். இதன் விளைவாக இரவில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு பேருந்துகள் ஓடத் தொடங்கின.
இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் அவசரக் கூட்டத்தைக் கூட்டினர். அதில் வக்கீல்கள், நீதிபதிகளை, அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் தரக்குறைவாக விமர்சித்துப் பேசியுள்ளனர்.
எனவே போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க நிர்வாகிகளை போலீஸார் கைது செய்ய வேண்டும். அதுவரை காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்பை மேற்கொள்வது, தமிழ்நாடு பார் கவுன்சிலுடன் இணைந்து மாநில அளவில் இதை பெரிய பிரச்சினையாக்குவது என தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை முதல் வக்கீல்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு தொடங்கியுள்ளது. போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், போக்குவரத்துக் கழக நிர்வாகிகள், ஊழியர்கள் 50 பேர் மீது கடலூர் புது நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வழக்குப் பதிவு செய்யப்பட்ட 50 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வக்கீல்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் கைது செய்தால் மீண்டும் போராட்டத்தில் குதிப்போம் என்று போக்குவரத்துக் கழக ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் காவல்துறையினர் குழம்பியுள்ளனர். தொடர்ந்து கடலூரில் பதட்டம் நிலவுவதால் நீதிமன்றம், போக்குவரத்துக் கழக டெப்போ, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.