காதலர்களை விரட்ட மாட்டோம்-போலீஸ் கமிஷ்னர்
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும் காதலர்களை போலீசார் தொந்தரவு செய்ய மாட்டார்கள். தாராளமாக வந்து அமர்ந்து பேசலாம் என்று சென்னை நகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் கூறியுள்ளார்.
மெரீனா கடற்கரையில் பட்டப்பகலில் குஜாலில் ஈடுபடும் ஜோடிகளை போலீசார் விரட்டியடித்து வருகின்றனர். இதில் பல 'கள்ள ஜோடிகள்' என்றாலும் 'நல்ல ஜோடிகளும்' இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் நிருபர்களிடம் கமிஷ்னர் கூறியதாவது,
மெரீனா பீச்சிற்கு வரும் காதலர்களை தொந்தரவு செய்யவேண்டும் என்பது போலீசாரின் நோக்கமும் கிடையாது, அது எங்களின வேலையும் கிடையாது. காதல் ஜோடிகள் தாராளமாக வரலாம். ஆனால் மற்றவர்கள் அறுவெறுக்க தக்கவகையில் நடந்து கொண்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்.
காதல் ஜோடிகளின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவலர்களுக்கு அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படியே அவர்களும் நடந்து கொள்கிறார்கள். போலீசார் கடற்கரையில் ரோந்து வருவதால் காதல் ஜோடிகளிடம் வம்பு செய்யும் ரவுடிகளின் கொட்டம் அடங்கிவிட்டது.
விநாயகர் ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் 23ம் தேதி நடைபெறுகின்றது. இதையொட்டி 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். எனது தலைமையில் அனைத்து இணை கமிஷனர்களும், துணை கமிஷனர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளோம்.
மேலும் 7 துணை கமிஷனர்களை பாதுகாப்பு பணிக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 6 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசாரும், கமாண்டோ படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.
ஊர்வலம் நடத்துபவர்களிடம் நான் நேரடியாகவும், அமைப்பாளர்கள் மூலமும் கூட்டங்கள் நடத்த உரிய அறிவுரைகள் வழங்கி உள்ளேன். சர்ச்சைக்குரிய கோஷங்கள் இல்லாமல் அமைதியான முறையில் ஊர்வலம் நடத்தி எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.
திருட்டு பொருட்கள் மீட்பு
சென்னை நகரில் திருட்டு வழக்கு தொடர்பாக கடந்த 1 மாதத்திற்குள் 72 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.1.7 கோடி மதிப்புள்ள நகை, பணம், செல்போன், கார் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன என்றார் நாஞ்சில் குமரன்.