வேதாந்தி மீது கடும் நடவடிக்கை - பிரதமருக்கு திமுக கோரிக்கை
சென்னை:
முதல்வர் கருணாநிதிக்கு எதிராக ஃபாத்வா விடுத்த முன்னாள் பாஜக எம்.பியும், வி.எச்.பி. தலைவருமான ராம் விலாஸ் வேதாந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் கருணாநிதியின் தலையைக்கும், நாக்குக்கும் விலை வைத்து ஃபாத்வா பிறப்பித்துள்ளார் வேதாந்தி.
இதுபோன்ற சட்டவிரோதமான, ஜனநாயக விரோத, வன்முறையைத் துண்டும் செயல்களுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம்.
மதவாத வெறியர்களின் பக்க பலத்துடன் இயங்கும் வேதாந்தி போன்றவர்களின் செயல்களை, உள்நோக்கத்தை வேரறுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டின் மதச்சார்பற்ற தன்மை, ஸ்திரத்தன்மைக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டு விடும்.
முதல்வர் கருணாநிதிக்கு விடுக்கப்பட்டுள்ள அநாகரீகமான, இழிவான கொலை மிரட்டலால் உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் மக்களின் நெஞ்சங்கள் குமுறிக் கொண்டுள்ளன.
வி.எச்.பி விடுத்துள்ள இந்த கொலை மிரட்டல் தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது. கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தமிழர்களும் இந்த எச்சரிக்கையால் வேதனையுற்றுள்ளனர்.
தமிழகத்தில் நிலைமை மிகவும் பதட்டமாக உள்ளது. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தமிழக மக்கள் உள்ளனர்.
எனவே நிலைமை மோசமாகி, விரும்பத்தகாத விளைவுகளுக்குப் போய் விடுவதற்கு முன்பு, இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்த தாங்கள் உடனடியாக தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் பாலு.












Click it and Unblock the Notifications