'கலைஞருக்குப்' பேட்டி; குடியாத்தம் நகராட்சி தலைவர் மீது அதிமுக ஆத்திரம்!
குடியாத்தம்:
திமுகவின் கலைஞர் டிவிக்கு, குடியாத்தம் அதிமுக நகராட்சித் தலைவர் பேட்டி கொடுத்ததால், வேலூர் மாவட்ட அதிமுகவினர் கடுப்பாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் அதிமுக சார்பில் கவுன்சிலராக இருப்பவர் சிவப்பிரகாசம். இவர் முதலில் சுயேச்சையாகத்தான் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவருக்கு அதிமுக ஆதரவு கொடுத்து, அதிமுக வேட்பாளராக நிறுத்தி ஜெயிக்க வைத்து, நகராட்சித் தலைவர் பதவியும் கொடுத்தது.
இந்த நிலையில், கடந்த 19 ம்தேதி கலைஞர் டிவியில் சிவப்பிரகாசம் பேட்டி கொடுத்தார். இதைப் பார்த்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
குடியாத்தம் நகராட்சித் தலைவர் பதவியை சிவபிரகாசம் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுகவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இந்த பதவி அதிமுகவால் கிடைத்த பதவி. கட்சி கட்டுப்பாட்டை மீறிய சிவபிரசாசத்தை உடனே கட்சியை விட்டு நீக்க வேண்டும் என அதிமுக தலைமைக்கும் புகார் அனுப்பியுள்ளனர்.
ஆனால் சிவப்பிரகாசமோ, எனது தொழில் தொடர்பாகத்தான் பேட்டி கொடுத்தேன். அதில் என்ன தவறு இருக்கிறது. எனக்கு பிஸினஸ் தான் முதலில், மற்றதெல்லாம் பிறகுதான் என்று கூறி வருகிறாராம்.
விரைவில் திமுகவில் இணைய சிவப்பிரகாசம் ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.