வேதாந்தி மீது திமுக மாணவர் அணி வழக்கு
சென்னை:
முதல்வர் கருணாநிதியின் தலையை வெட்டச் ெசான்ன விஎச்பி தலைவரும் முன்னாள் பாஜக எம்பியுமான வேதாந்தி மீது திமுக மாணவர் அணியின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக மாணவர் அணிச் செயலாளர் புகழேந்தி மற்றும் தங்கையா ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
முதலமைச்சர் கருணாநிதியின் தலையை துண்டித்து கொண்டு வருபவருக்கு எடைக்கு எடை தங்கம் பரிசளிக்கப்படும் என விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த முன்னாள் பாஜக எம்.பி. ராம்விலாஸ் வேதாந்தி கூறியுள்ளார்.
கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் அவர் பேசியது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர் குலைக்கும் வகையில் உள்ளது. அவரது பேச்சு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் மத உணர்வுகளைத் தூண்டிவிடும் வகையிலும் உள்ளதாலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ராஜகோபால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை வரும் 10ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.